ஓ மை காட்.. பாரீசிலிருந்து கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்.. 700 கி.மீ தூரத்திற்கு டிராபிக் ஜாம்
பாரீஸ்: கொரோனா 2வது அலை முதல் அலையைவிட மோசமாக ஐரோப்பிய நாடுகளை தாக்குகிறது. இதனால் பல நாடுகளும் லாக்டவுனை கடுமையாக்கியுள்ளன. பிரான்சிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், பாரீஸ் நகர மக்கள் கூட்டம் கூட்டமாக கார்களில் நகரை விட்டே கிளம்பி ஓடிக் கொண்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 31 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 565 ஆக அதிகரித்துள்ளது
கொரோனா பாதிப்பின், 2வது அலை தொடங்கி உள்ளதால், அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்சில் ஊரடங்கு
அத்தியாவசியமான தேவைகள் மற்றும் அவசர மருத்துவ பணிகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அக்டோபர் 30ம் தேதியான நேற்று, வெள்ளிக்கிழமை முதல் பிரான்ஸ் மீண்டும் இந்த லாக்டவுனை அறிமுகம் செய்துள்ளது. வேலைக்குச் செல்வதற்கும் (வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாவிட்டால்), அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும், மருத்துவ உதவியை நாடுவதற்கும் அல்லது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதற்கும் மட்டுமே மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

700 கி.மீட்டர் தூரம்
பிரான்ஸ் அரசின் இந்த திடீர் ஊரடங்கு அறிவிப்பால் பாரிஸ் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் அனைவரும் 29ம் தேதி இரவோடு இரவாக அவரவர்களின் சொந்த ஊருக்கு ஒரே நேரத்தில் செல்ல ஆரம்பித்துள்ளனர். எனவே நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அங்கு அணிவகுத்து நின்றன. சுமார் 700 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த வாகன நெரிசல் இருந்தது. ஹார்ன் சத்தம் காதை பிளந்தது.

பெல்ஜியம் நிலவரம்
இதனிடையே, பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூ திங்கள்கிழமை முதல் தேசிய அளவிலான கடுமையான லாக்டவுன் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளார். அத்தியாவசியமற்ற கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தில், தினசரி கொரோனா கேஸ் எண்ணிக்கை 100,000 பேருக்கு 150 ஆகும். பிரான்சில் இது ஏறக்குறைய 62 என்ற நிலவரத்தில் உள்ளது.

ஜெர்மனியில் கட்டுப்பாடுகள்
ஜெர்மனியில், நவம்பர் 2 முதல், நாடு முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. தியேட்டர்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், உணவகங்கள் மற்றும் மதுக்கடைகள் உள்ளிட்டவற்றுக்கு கட்டுப்பாடுகள் அடங்கும். அதிகபட்சம் 10 நபர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கப்படுகிறது.
|
இத்தாலியில் ஊரடங்கு
இத்தாலியில், அக்டோபர் 26 திங்கட்கிழமை தொடங்கிய புதிய கட்டுப்பாடுகள் இத்தாலியில் அடுத்த ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும். நாடு முழுவதும் உள்ள அனைத்து பார்கள் மற்றும் உணவகங்கள் மாலை 6 மணியோடு மூடப்பட வேண்டும். ஜிம்கள், நீச்சல் குளங்கள், தியேட்டர்கள் மூடப்பட வேண்டும், திருமணங்கள், ஞானஸ்னானம் மற்றும் இறுதி சடங்குகளுக்கான கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications