திடீர் திருப்பம். ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணி முன்னிலை இடங்களில் கிடுகிடு உயர்வு..பரபர பீகார் தேர்தல்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் காலை முதல் முன்னிலை நிலவரம் மாறி மாறி பரபரப்பாக காணப்படுகிறது.
8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியதும் ஆரம்பத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் இடதுசாரிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கியது.
ஆனால் 10:30 மணிக்கு மேல் நிலைமை மாறியது. பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கியது.
பீகாரில் முதல் முறையாக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது பாஜக
அரசியல் பண்டிதர்கள்
ஆரம்பத்தில் தேஜஸ்வி யாதவ் இமேஜுக்காக ஓட்டுக்கள் விழுந்துள்ளதாக கூறிய அரசியல் பண்டிட்டுகள், பிறகு லாலு பிரசாத் யாதவின் ஆட்சிகாலம் திரும்பி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக நிதிஷ்குமார் பாஜக கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போட்டு இருக்கலாம் என்று கருத்துக்களை சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
தேர்தல் ஆணையம்
ஆனால் இப்போது எந்த ஒரு விஷயத்தையும் அறுதியிட்டுக் கூற முடியாது என்கிறது தேர்தல் ஆணைய வட்டாரங்கள். இதுபற்றி பெயர் தெரிவிக்க விரும்பாத தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: பிகார் சட்டசபை தேர்தல்கள் கொரோனா நோய்களுக்கு இடையே நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தல் ஆகும். எனவே வழக்கமான தேர்தல் நடைமுறையை விடவும் இது மாறுபட்டது. வாக்குசாவடி எண்ணிக்கை, வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை போன்ற அனைத்துமே தற்போது அதிகம்.
பல ரவுண்டுகள்
சில தொகுதிகளில் 12, சில தொகுதிகளில் 18 ரவுண்ட் வாக்கு எண்ணிக்கை கூட நடைபெறும். இப்போது வரை, 10 சதவீதத்துக்கும் கீழேதான் இதுவரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று உள்ளது. எனவே மதியத்துக்கு மேல் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
பலமான தொகுதிகள் இருக்கே
சில கூட்டணிகள் தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் மிகப்பெரிய முன்னிலை பெற்று நிலைமையை தலைகீழாக மாற்றலாம் இவ்வாறு தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் மாதிரி
எனவே பீகார் சட்டசபை தேர்தல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போல சுவாரஸ்யம் நிறைந்ததாக சென்றுகொண்டிருக்கிறது. அவசரப்பட்டு மக்கள் எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிட முடியாதபடி மாலை வரை சுவாரசியம் நீடிக்கும் என்பதே யதார்த்தம்.
20 சதவீதம் ஓட்டுக்கள்
மதியம் 1 மணிவரை வெறும் 20 சதவீதம் ஓட்டுக்கள்தான் எண்ணப்பட்டுள்ளன என்று பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சீனிவாஸ் தெரிவித்துள்ளார். எனவே 80 சதவீத ஓட்டுக்களை எண்ணாமல் டிரெண்ட்டை முடிவு செய்ய முடியாது. குறிப்பாக சில தொகுதிகளில் ஓட்டு வித்தியாசம் இரு கூட்டணிக்கு இடையே 5000 என்ற அளவுக்கும் குறைவாகத்தான் இருக்கிறதாம்.
மாலை நிலவரம்
மாலை 5 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 120 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணி 114 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தது. லோக் ஜன சக்தி 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. ஒரு கட்டத்தில், பாஜக கூட்டணிக்கும் ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணிக்கும் இடையேயான முன்னிலை நிலவரம் சுமார் 30 தொகுதிகள் என்ற அளவுக்கு இருந்தது. ஆனால் மாலை முதல் நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. இரவு 7 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 119 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணி 116 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று கடும் போட்டியாக உருவெடுத்துள்ளது. அசாதுதின் ஓவைசி கட்சி கூட்டணி 5 இடங்களில் வெல்லும் வாய்ப்பு இருப்பதால் கிங் மேக்கராக மாறக்கூடும்.