நிதீஷ் குமார் ஆட்டம் ஆரம்பம்.. டெல்லி பயணம்.. ராகுல், கெஜ்ரிவாலுடன் சந்திப்பு.. ஓரணியாக்க முயற்சி
பாட்னா: டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்களை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் ராகுல் காந்தி நடைபயணம் என்று காங்கிரஸ் கட்சி பரபரக்க, இன்னொரு பக்கம் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்கு என தனி குழு அமைத்து பாஜக செயல்பட்டு வருகிறது.
இதனிடையே தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் பாஜக கூட்டணியை முறித்து ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து பீகார் முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள நிதீஷ் குமார் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வலுவடைகிறதா மூன்றாவது அணி? பீகார் முதல்வர் நிதீஷ் குமாருடன் கேசிஆர் சந்திப்பு.. பின்னணி!
நிதீஷ் குமார் டெல்லி பயணம்
வரும் 5ம் தேதி டெல்லி செல்லும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்திருந்தார்.
செயற்குழு கூட்டம்
அதேபோல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களை ஒரே அணியில் கொண்டு வருவதற்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகளை சந்தித்து ஓர் அணியில் கொண்டு வரவே இந்த பயணம் என்று பார்க்கப்படுகிறது.
ஐக்கிய ஜனதா தளம் முடிவு
இதனிடையே மணிப்பூர் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் 5 எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைந்தது அக்கட்சியினர் இடையே கோபத்தை அதிகரித்துள்ளது. இதனால் பாஜகவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மறைமுக தாக்குதல்
அதுமட்டுமல்லாமல் ஐக்கிய ஜனதா தளத்தின் செயற்குழு கூட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள பேனர்களில், பிரதமர் மோடியையும், பாஜகவையும் மறைமுகமாக தாக்கி அதிகளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் டெல்லி அரசியல் பயணம் பல்வேறு அரசியல் பார்வையாளர்களின் கவனத்தையும் திருப்பியுள்ளது. மேலும், பாஜகவுடனான கூட்டணியை முறித்த பின், நிதீஷ் குமார் முதல்முறையாக டெல்லி செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.