பீகார்: நிதிஷ் அரசுக்கு ஆதரவு - ஆனால் அமைச்சரவையில் சேர மாட்டோம்.. சிபிஐ (எம்.எல்) திடீர் அறிவிப்பு
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவோம்; ஆனால் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்று சிபிஐ(எம்.எல்) கட்சி திடீரென அறிவித்துள்ளது.
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஜேடியூ, ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளது. முதவ்லராக நிதிஷ்குமார், துணை முதல்வராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுள்ளனர்.
நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை அடுத்த ஓரிரு நாட்களில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஆகஸ்ட் 24-ந் தேதி பீகார் சட்டசபையில் நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்நிலையில் பீகார் சட்டசபையில் 12 எம்.எல்.ஏக்களைக் கொண்ட சிபிஐ (எம்.எல்.) கட்சியின் பொதுச்செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திபாங்கர் பட்டாச்சார்யா கூறியதாவது: நிதிஷ்குமார் தலைமையிலான மெகா கூட்டணி அரசை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனால் நிதிஷ்குமார் அமைச்சரவையில் இடம்பெறுவதில்லை என முடிவு செய்துள்ளோம்.
பீகாரில் பாஜக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பீகாரில் பாஜக அல்லாத அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டை பாஜகவின் சர்வாதிகார பிடியில் இருந்து விடுவிப்பதற்கான பாதையை பீகார் வெளிப்படுத்தி இருக்கிறது. அரசியல் சாசன அமைப்புகள், ஜனநாயக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தும் சக்திகளுக்கு எதிராக போராடுவோருக்கு பீகார் நம்பிக்கை அளித்துள்ளது.
Recommended Video
பீகாரில் ஆளுநர் மூலமாக பல்கலைக் கழகங்கள் சூறையாடப்பட்டன. பீகாரில் புதிய அரசாங்கமானது கல்விச் சூழலை கல்விக் கட்டமைப்பை அடியோடு மாற்றி அமைத்தாக வேண்டும். அதேபோல் மதுபான மாஃபியாக்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். சிறையில் இருப்பவர்களை விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தீபாங்கர் பட்டாச்சார்யா கூறினார். இதற்கு பாஜக கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது.