பீகார் சட்டசபை தேர்தல் 2020: மாலையில் விறுவிறுப்பு - 3 மணிவரை 45.85% வாக்குகள் பதிவு
பீகாரில் 3ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிற்பகலுக்கு மேல் விறுவிறுப்படைந்துள்ளது. மாலை 3 மணி நிலவரப்படி 45.85% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் இறுதி கட்ட வாக்குப் பதிவு இன்று 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு மாலையில் விறுவிறுப்படைந்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 45.85% வாக்குகள் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Recommended Video
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு இதுவரை 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளன. முதல் கட்டமாக கடந்த மாதம் 28ஆம் தேதி 71 தொகுதிகளிலும், 2ஆம் கட்டமாக கடந்த 3ஆம் தேதி 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 3ஆம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. வடக்கு பீகார், சீமன்சல் பிராந்தியத்தில் உள்ள 78 தொகுதிகளில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கையுறைகள், முக கவசங்கள் வழங்கப்படுகின்றன. தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரபலமான வேட்பாளர்கள்
ஓட்டுப்போட தகுதிபெற்ற வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 34 லட்சம் ஆகும். 1,204 வேட்பாளர்கள் இன்றைய தினம் களத்தில் உள்ளனர். அவர்களில் சபாநாயகர் விஜயகுமார் சவுத்ரி, 12 அமைச்சர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் சரத்யாதவின் மகள் சுபாஷிணி யாதவ் ஆகியோர் பிரபலமான வேட்பாளர்கள் ஆவர்.
போட்டி அதிகம்
கடந்த இரண்டு கட்ட தேர்தல்களில் ஆளும் ஜேடியூ-பாஜக மற்றும் ஆர்ஜேடி- காங்கிரஸ் இடதுசாரிகள் இடையே இரு முனைப் போட்டி நிலவியது. இன்று 3ஆம் கட்டமாக நடைபெறும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த பாஜக வேட்பாளர்கள் 35 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 37 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. விகாஸ் சீல் இன்சான் கட்சி 5 தொகுதிகளிலும், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
களத்தில் வேட்பாளர்கள்
மகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 46 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) 5 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
விறுவிறு வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு நடைபெறும் 78 சட்டசபை தொகுதிகளில் 72 தொகுதிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது பிற்பகலுக்கு மேல் விறுவிறுப்படைந்தது. மாலை 3 மணிவரை 45.85 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மற்ற தொகுதிகளில் மாலை 6 மணி வரைக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஆட்சியை பிடிப்பது யார்
தனி கூட்டணி அமைத்துள்ள லோக் ஜனசக்தி 42 இடங்களில் போட்டியிடுகிறது. 243 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்று தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 10ஆம் தேதி நடைபெறுகிறது. நிதிஷ்குமார் ஆட்சியை தக்கவைப்பாரா?அல்லது தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்று என்று இன்னும் சில தினங்களில் தெரியவரும்.