பீகாரில் செம ஆட்டம்- இந்தி பேசும் மாநிலங்களில் முதல் முறையாக எழுச்சி பெற்ற இடதுசாரி கட்சிகள்!
பாட்னா: இந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றான பீகாரில் இடதுசாரி கட்சிகள் எழுச்சி பெற்றிருப்பதாகவே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பீகாரில் 29 இடங்களில் போட்டியிட்ட இடதுசாரிகள் 19 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன.
இடதுசாரிகளைப் பொறுத்தவரை திரிபுரா, மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு என விரல்விட்டு எண்ணும் மாநிலங்களில்தான் தேர்தல் அரசியலில் இடத்தைக் கொண்டிருக்கிறார். இந்தி பேசுகிற வட இந்திய மாநிலங்களில் அப்படியான ஒரு தாக்கத்தை இடதுசாரி கட்சிகளால் பெற முடியவில்லை.
20 ஆண்டுக்கு பின்னர் வாக்குப்பதிவில் பீகார் மக்கள் தரமான சம்பவம்.. கலக்கத்தில் கட்சிகள்
3 எம்.எல்.ஏக்கள்
பீகார் சட்டசபையில் சிபிஐ(எம்எல்) கட்சி 3 எம்.எல்.ஏக்களைத்தான் கொண்டிருந்தது. கடந்த காலங்களில் ஆர்ஜேடியை இடதுசாரிகள் கூட்டாக ஆதரித்திருக்கிறார். அதேநேரத்தில் அண்மைக்காலமாக காங்கிரஸுடன் நெருங்கிச் செல்வதை விரும்பாமலும் இருந்தனர் இடதுசாரிகள்.
மெகா கூட்டணியில் இடதுசாரிகள்
இந்த நிலையில் பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் சிபிஐஎம்எல்- சிபிஐ, சிபிஎம் ஆகியவை இணைந்தன. அகில இந்திய அளவில் இந்த கூட்டணி, பாஜக அல்லாத கட்சிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தொகுதி பங்கீட்டிலும் இடதுசாரிகள் 29 இடங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
ஆர்ஜேடி-காங். திட்டம்
சிபிஐஎம்எல் 19 இடங்களிலும் சிபிஐ 6, சிபிஎம் 4 இடங்களிலும் போட்டியிட்டன. இடதுசாரிகளின் வாக்குகளை சிதறவிடாமல் தங்களுடன் வைத்துக் கொள்வது உதவும் என்பது ஆர்ஜேடி-காங்கிரஸின் கணக்கு. சிவான், ஆர்வால், ஜெகனாபாத், ரூரல் பாட்னா, கதியார் தொகுதிகளில் சிபிஐஎம்எல்-க்கு செல்வாக்கு இருக்கிறது.
இந்தி மாநிலங்களில் செங்கொடி பறக்குமா?
சிபிஐ கட்சிக்கு பெகுசராய், மதுபானி, ககாரியாவில் செல்வாக்கு இருக்கிறது. இதனை எல்லாம் கணக்கில் வைத்துதான் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி அமைத்திருக்கிறது. இன்றைய வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலையில் 19 தொகுதிகளில் இடதுசாரிகள் முன்னணியில் உள்ளன. சிபிஐஎம்எல் கட்சி போட்டியிட்ட 19-ல் 14 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் இடதுசாரிகளுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.