காங்., பாஜகவுக்காக மாநில கட்சிகளின் முதுகில் குத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பாஸ்வான் கட்சி!
பாட்னா: தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதாவுக்காக மாநில கட்சிகளின் முதுகில் குத்துவதை தேர்தல் வியூகமாக வைத்திருக்கிறது மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்ஜனசக்தி.
பீகார் சட்டசபை தேர்தலில் இந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லோக்ஜனசக்தி இடம்பெறவில்லை. ஆனால் பீகாரில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களது லட்சியம் என்கிறது லோக் ஜனசக்தி.
இதனால் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஜேடியூவை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவோம் என்கிறது லோக்ஜனசக்தி. பாஜக-ஜேடியூ கூட்டணி அரசு அமைந்துவிடக் கூடாது; பாஜக தலைமையில் அந்த கட்சி பெரும்பான்மையுடன் ஒரு ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது லோக்ஜனசக்தியின் விருப்பம்.
இதெல்லாம் வேற லெவல் சாதனை.. கேப்பே விடாமல் 20 வருஷம்.. வேற யாரு.. நம்ம மோடிதான்!
பாஜகவுக்காக எல்ஜேபி
ஏனெனில் பீகாரில் ஜேடியூ அதிக இடங்களில் வெல்வதும் அந்த கட்சியின் நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக வேறுவழியே இல்லாமல் ஏற்பதும் பாஜகவுக்கு குடைச்சலாம். பாஜகவின் குடைச்சலைப் போக்கும் வகையில் ஜேடியூ அதிக இடங்களைக் கைப்பற்றாமல் தடுக்கவே இந்த நிலைப்பாட்டை எடுக்கிறதாம் லோக்ஜனசக்தி.
பாஜக வேடிக்கை பார்க்கிறது
கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் பார்த்தால் லோக்ஜனசக்தியை விரட்டியிருக்க வேண்டும் பாஜக. ஆனால் தம்முடைய பி டீமாக களத்தில் லோக்ஜனசக்தியை நிற்க வைத்து வேடிக்கை பார்க்கிறது பாஜக. ஜேடியூ குறைவான இடங்களில் வென்று தங்களுக்கு அதிகமான இடங்கள் கிடைத்துவிடும் என்கிற நப்பாசைதான் இந்த கணக்குகளின் பின்னணி.
2005 தேர்தல் பார்முலாவாம்
இந்த போக்கை இப்போது மட்டுமல்ல.. 2005-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பின்பற்றியது லோக்ஜன சக்தி. அப்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சியிலும் மத்திய அமைச்சராக இருந்தார் ராம்விலாஸ் பாஸ்வான். அந்த ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
அன்று ஆர்ஜேடிக்கு எதிராக
காங்கிரஸ்- ஆர்ஜேடி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் காங்கிரஸ் அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்பதற்காக, ஆர்ஜேடியை எதிர்த்து போட்டியிட்டது பாஸ்வானின் இந்த லோக்ஜனசக்தி கட்சி. ஆர்ஜேடியை எதிர்த்து 178 தொகுதிகளில் பாஸ்வான் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. அப்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆர்ஜேடிக்கு 89 இடங்களும் பாஸ்வான் கட்சிக்கு 29 இடங்களும் கிடைத்தன. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலானது.
ஜேடியூவை எதிர்த்து..
பின்னர் பாஸ்வான் கட்சியை உடைத்து அந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் 9 மாதங்களுக்குப் பாஜக ஆட்சியை அமைத்தது. நிதிஷ்குமார் முதல்வரானார். தற்போது அதேபோன்ற ஒரு சூழ்நிலையைத்தான் மீண்டும் அரங்கேற்ற காத்திருக்கிறது பாஸ்வான் கட்சி. அன்று ஆர்ஜேடி என்கிற மாநில கட்சியின் முதுகில் குத்தியது. இன்று ஜேடியூ என்கிற முதுகில் குத்தியது. அன்று ஆர்ஜேடி வளர்ந்துவிடக் கூடாது என காங்கிரஸ் விரும்பியது; இன்று ஜேடியூ வளர்ந்துவிடக் கூடாது என பாஜக விரும்புகிறது. இந்த விருப்பங்களை நிறைவேற்றுகிற எடுபிடி கட்சியாக பாஸ்வான் கட்சி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது! அரசியல் விநோதங்கள்!