புதுவை சட்டசபையில் திமுக பலம் 3 ஆக உயர்ந்தது.. தட்டாஞ்சாவடி எம்எல்ஏ வெங்கடேசன் பதவியேற்பு
புதுச்சேரி: புதுவை தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வெங்கடேசன், அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுகொண்டார். இதன் மூலம் புதுவை சட்டமன்றத்தில் திமுக எம்எல்ஏக்களின் பலம் மூன்றாக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இதில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அசோக் ஆனந்தன், சொத்து குவிப்பு வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து தட்டாஞ்சாவடி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்ற புதுவையில் நடைபெற்ற மக்களவை தேர்தலோடு சேர்த்து, தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் - திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் முடிவுகள் கடந்த 23-ம் தேதி வெளியானது அதில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நெடுஞ்செழியனை 1,539 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றார். இதனிடையே பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற திமு வேட்பாளர் வெங்கடேசன் இன்று சட்டடன்ற உறுப்பினராக பதவியேற்று கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான விழா சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் அறைக்கு பின்புறம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. விழாவில் சபாநாயகர்(பொறுப்பு) சிவக்கொழுந்து அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என கூறப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் திட்டமிட்டப்படி புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்ற விழாவில், துணை சபாநாயகர் சிவகொழுந்து வெங்கடேசனுக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வெங்கடேசன் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற வெங்கடேசனுக்கு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமானோர் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications