மேலும் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தால்.. கவிழும் அபாயத்தில் புதுவை காங். அரசு!
புதுச்சேரி: எம்.எல்.ஏ. மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமாவை தொடர்ந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டசபை தேர்தலுக்கு முன்னரே கவிழும் நிலையில் உள்ளது.
Recommended Video
30 இடங்கள், 3 நியமன எம்.எல்.ஏக்களை கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கு 2016-ல் தேர்தல் நடைபெற்றது. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வென்றது. திமுக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சுயேட்சை எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் (மாஹே) காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தந்தார். அப்போது மொத்தம் 18 எம்.எல்.ஏக்கள், முதல்வர் நாராயணசாமி அரசுக்கு ஆதரவாக இருந்தனர்.
2019-ல் வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் தட்டாஞ்சாவடி என்.ஆர். காங். எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் பதவி பறிபோனது. அவர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தட்டாஞ்சாவடியில் வெற்றி
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வெங்கடேசன் வேட்பாளராக போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இதனால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் பலம் 19 ஆக உயர்ந்தது. ஆனால் அதன்பின்னர் காட்சிகள் அத்தனையும் மாற தொடங்கிவிட்டன.
பாகூர் தனவேலு
கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுனுக்கு மத்தியில் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு, நாராயணசாமி அரசுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார். இதனால் அவரது எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் சிவக்கொழுந்து பறித்தார். இதனால் சட்டசபையில் காங்கிரஸ்- திமுக கூட்டணி பலம் 18 என குறைந்தது.
பாஜகவில் இணைந்த 2 பேர்
அண்மையில் அமைச்சர் நமச்சிவாயம் போர்க்கொடி தூக்கினார். அவருடன் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தானும் கை கோர்த்தார். பின்னர் 2 பேரும் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர். இதனால் சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி அரசுக்கான பலம் 16 என மேலும் குறைந்து போனது.
மல்லாடி கிருஷ்ணாராவ்
சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் பதவியை ஏனாம் எம்.எல்.ஏ. மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்தார். இதனையடுத்து தற்போது எம்.எல்.ஏ. பதவியையும் மல்லாடியார் ராஜினாமா செய்திருக்கிறார். இந்த ராஜினாமா ஏற்கப்பட்டால் நாராயணசாமி அரசுக்கு 15 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு என்ற நிலை ஏற்படும்.
சட்டசபை பலம் என்ன?
எதிர்வரிசையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதிமுகவுக்கு 4 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேரும் பாரதிய ஜனதா கட்சியினர். எதிர்க்கட்சிகளின் பலம் தற்போது 14 ஆகவும் அரசின் பலம் 15 ஆகவும் உள்ளது.
எந்த நேரத்தில் ஆட்சி கவிழும்?
இந்த நிலையில் மேலும் ஒரு காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால் முதல்வர் நாராயணசாமி அரசு கவிழ்ந்துவிடும் சூழ்நிலை உள்ளது. அதாவது சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலைதான் உள்ளது என்பது அங்குள்ள களநிலவரம்.