புதுவையில் கிரண்பேடி காமெடிகள் முடிந்த பிறகு ஒருவர் வந்தார்.. தமிழிசை மீது முதல்வர் ஸ்டாலின் அட்டாக்
புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், " புதுவையில் கிரெண்பேடி காமெடிகள் முடிந்த பிறகு தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அவர் அங்கே ஆளுநராக இருந்துகொண்டு தமிழ்நாட்டு அரசியலை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்" என்று விமர்சித்து பேசினார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு நாளும் துணை நிலை ஆளுநர்களின் பேச்சு, புதிதாக ஆளுநர்களை வரவழைத்து அரசியல் கூத்தினை அரங்கேற்றி வருகின்றனர். கிரெண்பேடி காமெடிகள் முடிந்த பிறகு தமிழிசை சவுந்தரராஜ் வந்தார். அவர் அங்கே ஆளுநராக இருந்துகொண்டு தமிழ்நாட்டு அரசியலை பற்றி பேசிக்கொண்டு இருந்தாங்க. தேர்தல் வந்ததும் இப்போ மீண்டும் பாஜகவுக்கே போய்விட்டார்.
புதுச்சேரி வரலாற்றில் ராஜ்யசபா வாசலிலே முதல்வராக இருந்த நாராயணசாமி அமர்ந்து போராட்டம் நடத்தினார். இது தான் புதுச்சேரிக்கு பாஜக செய்த சாதனை. தொழில், சுற்றுலா எல்லாத்தையும் பெஸ்டாக மாற்றுவேன் என்று சொன்னாரே?.. செய்தாரா?.. காங்கிரஸ் கட்சியிடம் ரிப்போர்ட் எல்லாம் கேட்டாரே?.. இப்போது நாங்க கேட்கிறோம்.. நீங்கள் ரிப்போர்ட் கார் தருவீர்களா?..
நாராயணசாமி கட்சி மேலிடத்தை கேட்டு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்கள். ஆனால் இப்போ.. வேற கட்சியை சேர்ந்த ரங்கசாமியை தங்கள் பேச்சை கேட்க சொல்லி என்ன பாடு படுத்துகிறார்கள். ஆளுதான் உயரம். உயரமாக இருந்து என்ன பிரயோஜனம்.. உயரத்திற்கு ஏற்ற அறிவுக்கு இருக்கனும். உயரத்திற்கு ஏற்ற சுயமரியாதை இருக்கனும். அன்று முதல்வராக இருந்த நாராயணசுவாமிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஆதங்கத்துடன் பேசினீர்களே..
இன்றைக்கு முதல்வராக இருப்பது ரங்கசாமி. உங்க கூட்டணியில் இருப்பதில் எது பெரிய கட்சி. ரங்கசாமியினுடைய கட்சி தான். புதுச்சேரியில் எத்தனை நாடாளுமன்ற தொகுதி இருக்கிறது. ஒன்றே ஒன்று தான்.. அதிலேயும் பாஜக தான் போட்டி என்று அவர் வாயாலேயே சொன்னீங்க. ரங்கசாமி தனி கட்சி ஆரம்பிக்க காரணமே நமச்சிவாயம் தான். இப்போ அந்த நமச்சிவாயத்திற்கு ஓட்டு கேட்கிற நிலையை உருவாக்கி அந்த கட்சியை உங்க கண்ட்ரோலில் வைத்துக்கொள்வது தான் ஜனநாயகமா?.
உள்துறை அமைச்சராக சும்மா இருந்தவரை தேர்தலில் நிறுத்தியிருக்கிறார்கள். நமச்சிவாயம் எத்தனை கட்சி மாறியிருக்கிறார் என்றால் எனக்கே தலை சுற்றுகிறது. எத்தனை கட்சியில் இருந்தார் என்று கணக்கு போட்டு பார்த்தால் எனக்கே தலை சுற்றுகிறது. இனும் 2 மாதம் போனால் அவர் எந்த கட்சிக்கு போவார் என்று தெரியவில்லை. புதுவைக்கு பாஜக என்ன செய்தது? நாமக்கல் மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க முடிந்ததா?.. அவர்கள் விஷ்வகுரு இல்லை மவுன குரு..
பிரதமர் மோடி மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் தான் பிரசாரம் செய்கிறார். என்றைக்காவது இடஒதுக்கீட்டை பாதுகாப்பேன், சமூக நீதியை பாதுகாப்பேன் என்று அவர் சொல்லியிருக்கிறார்?.. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications