நெஞ்சு பொறுக்குதில்லையே.. பராமரிப்பு இன்றி கிடக்கும் மகாகவி பாரதியாரின் நினைவு இல்லம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மகாகவி பாரதியாரின் நினைவகம் உரிய பராமரிப்பு இன்றி, சிதலமடைந்து வருகிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மகாகவி பாரதியார் 1908 முதல் 1918 ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். பாரதியின் வாழ்வில் முக்கிய பகுதியாக கருதப்பட்ட இந்த காலகட்டத்தில்தான் இந்த வீட்டிலிருந்தவாறு குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை பாரதி படைத்தார்.
இத்தகையை பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பாரதியார் வசித்த வீட்டை புதுச்சேரி அரசு அருங்காட்சியகமாகவும், நூலகமாகவும் பராமரித்து வருகிறது. இங்கு பாரதி தங்கியிருந்தபோது எழுதிய கவிதைகளின் கையெழுத்து பிரதிகள், பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்ட பாரதியின் 17 ஆயிரம் புத்தகங்கள், கடிதங்கள், ஆவணங்கள், அரிய புகைப்படங்கள், அவர் அமர்ந்த இருக்கைகள், கட்டில்கள், குவளைகள், ஓலைச்சுவடிகள் என பல அபூர்வமான விஷயங்கள் இந்த நினைவகத்தில் உள்ளன.
இந்ந நினைவு இல்லத்தை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள், பள்ளி - கல்லூரி மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நாள்தோறும் இங்கு வந்து செல்லும் நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு 1 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பாரதியாரின் இல்லம் தற்போது முகப்பில் காரைகள் பெயர்ந்தும், தரைகளில் உடைசல்கள் ஏற்பட்டும் சிதலமடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது.
மேலும், இங்கு காவலாளிகள் இல்லாததால் இரவு நேரத்தில் பாரதி வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். எனவே அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு சிதலமடைந்த பகுதிகளை சரிசெய்து, அங்கு 24 மணி நேரமும் பாதுகாவலர்களை நியமித்து, கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டுமென வரலாற்று ஆய்வாளர்களும், தமிழறிஞர்களும் வலியுறுத்துகின்றனர்.