அறந்தாங்கியில் போதையில் அலப்பறை.. வாக்குச்சாவடியில் இ.வி.எம் மெஷினை அரிவாளால் உடைத்த 'குடி'மகன்!
புதுக்கோட்டை: அறந்தாங்கி அடுத்த ஆலங்குடியில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட 'குடி'மகன் அரிவாளால் வாக்குச்சாவடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே பொதுமக்கள் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு மத்தியிலும், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை செய்து முடித்தனர்.
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். இந்த மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி அடுத்த ஆலங்குடியில் கிராமப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு சாவடியில் மக்கள் வாக்களித்து கொண்டிருந்தனர்.
அங்கு மதுபோதையில் கையில் அரிவாளுடன் வந்த வந்த வாலிபர் ஒருவர் பொதுமக்களிடம் அலப்பறையில் ஈடுபட்டார். தொடர்ந்து அங்கு ரகளையில் ஈடுபட்ட அந்த வாலிபர், மதுபோதையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஜன்னல் வழியாக அரிவாளால் உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குடிபோதையில் தகராறு செய்த அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர், அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்(வயது 35) என்பது தெரியவந்தது. போலீசார் அந்த நபரை பிடித்து சென்றனர். குடிமகனின் ரகளையால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலரான சார்ஆட்சியர் ஆனந்த்மோகன் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். அதன்பின்னர் மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடந்தது.