"மதமென பிரிந்தது போதும்".. அம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்! பூரித்த புதுக்கோட்டை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பரம்பூர் பகவதி அம்மன் கோயிலில் ஆடி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் பங்கேற்றிருந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகில் உள்ள பரம்பூரில் முஸ்லிம் தெருவில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்களால் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவின் போது பல்வேறு சமூகத்தினரால் மண்டகப்படி அம்மன் அலங்காரம் வீதி உலா கலை நிகழ்ச்சி 9 நாட்கள் நடைபெறும். இதே போல் 5ம் ஆண்டு மண்டகப்படி பட்டளாத்தார் மண்டகப்படி பெயரில் இஸ்லாமியர்கள் சார்பில் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும் இஸ்லாமிய சமூகத்தினரால் பகவதி அம்மனுக்கு மாலை மற்றும் பூஜை அபிஷேக பொருட்கள் வாங்கிக் கொடுத்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த அன்னதான விழாவில், கோவில் அருகே தனி பந்தல் அமைத்து பக்தர்களை வரவேற்று ஆயிரக்கணக்கானோருக்கு மதியம் வடை, பாயாசம், சாம்பார், மிளகு ரசம், தக்காளி கூட்டு என அனைத்து வகை காய்கறிகள் உள்ளிட்ட அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்து, மன மகிழ்ச்சியோடு இஸ்லாமியர்கள் வழங்கிய அன்னதானத்தையும் சாப்பிட்டு வாழ்த்தி சென்றனர். இந்த நிகழ்ச்சி சமூக ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் பேணுவதாக அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். இதுகுறித்து பக்தர் ஒருவர் கூறுகையில்,
"பகவதி அம்மன் கோயிலுக்கு அருகே மசூதியும் இருக்கிறது. பகவதி அம்மன் கோயிலில் ஆடிமாதம் காப்புக்கட்டி 9 நாட்கள் திருவிழா நடக்கிறது. இந்த 9 நாட்களில் 5வது நாள் மண்டகப்படி பட்டாளத்தார்களுக்கு அதாவது அவ்வூர் இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சந்தனக்காப்பு செலுத்தி புத்தம் புது பட்டாடைகள், தங்க நகைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீற்றிருக்க பக்தர்கள் அபிசேகம் செய்வது வழக்கம்.
அதே போல 5வது நாள் அன்று இஸ்லாமியர்கள் அம்மனுக்கு அனைத்து பூசைப் பொருட்களும் வாங்கி கொடுத்து சிறப்பு வழிபாடுகள் செய்வதுடன் அன்னதானம் வழங்கி மகிழ்கின்றனர். இப்படியாக இந்த ஆண்டு 5000 பேருக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கியுள்ளனர். இந்த நிகழ்வு வெறும் கோயில் திருவிழா சார்ந்தது மட்டுமல்லாது, மத நல்லிணக்கத்தை போற்றும் நிகழ்வாகவும் இருக்கிறது. நாங்களும் இந்த ஒற்றுமையைத்தான் விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார்.
இக்கோயிலின் திருவிழா புதுக்கோட்டை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications