"நீ என்ன இந்தி இசையா?” - ட்விட்டர்ல வறுத்தெடுக்குறாங்க.. பொங்கிய ஆளுநர் தமிழிசை!
புதுக்கோட்டை: தமிழ்ப்பற்று உனக்கு கிடையாதா? நீ என்ன இந்தி இசையா? என என்னிடம் கேட்கிறார்கள் என வேதனை தெரிவித்துள்ளார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
புதுச்சேரி ஜிப்மரில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஜிப்மர் முன்பு போராட்டம் நடத்தின.
இந்நிலையில், ஜிப்மரில் இந்தி திணிப்பு செய்யப்படவில்லை என்றும், எப்போதுமே இன்னொரு மொழியின் மீது துவேஷம் இருக்கக்கூடாது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
“நாங்க ஒண்ணும் சளைச்சவங்க இல்ல.. இதெல்லாம் இப்பதான்.. நானே மொதல்ல..”- தமிழிசை கடும் தாக்கு!
ஜிப்மர் சர்ச்சை
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி ஜிப்மரில் அலுவல் மொழியாக முடிந்தவரை இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கை மூலமாக ஜிப்மர் நிர்வாக இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தரவு பிறப்பித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, ஜிப்மரில் இந்தி திணிப்பு முயற்சியை மேற்கொள்வதைக் கண்டித்து தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன.
ஆளுநர் தமிழிசை
இந்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதை அடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஜிப்மரில் ஆய்வு செய்தார். பின்னர் ஜிப்மர் சுற்றறிக்கை தொடர்பாக மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வாலுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், "ஜிப்மரில் நிர்வாக ரீதியாக பகிரப்பட்ட சுற்றறிக்கை அது. ஆனால் அதை தவறாக புரிந்துகொண்டு இந்தி திணிக்கப்படுகிறது என்ற கருத்து பரவிக் கொண்டிருக்கிறது. ஜிப்மரில் இந்தி திணிப்பு எந்த விதத்திலும் இல்லை" எனத் தெரிவித்தார்.
தமிழ் தான் முதலில்
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார். பின்னர் சோழீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி ஜிப்மரில் பொதுமக்களுக்கான சுற்றறிக்கையில் தமிழ் தான் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் தமிழிலும், இரண்டாவதாக ஆங்கிலத்திலும், மூன்றாவதாகத்தான் இந்தியும் இருக்க வேண்டும் எனும் நடைமுறைதான் உள்ளது. எனத் தெரிவித்தார்.
இந்தி திணிப்பே இல்லை
மேலும் பேசியுள்ள அவர், இப்போது எல்லோரும் போராட்டம் நடத்துகிற விவகாரம், உள் நிர்வாகம் தொடர்பானது. மீண்டும் மீண்டும் சொல்கிறேன், ஜிப்மரில் எந்த விதத்திலும் இந்தி திணிக்கப்படவில்லை. ஜிப்மரில் மட்டுமல்ல, புதுச்சேரியில் எங்குமே இந்தி திணிக்கப்படவில்லை, அவர்களாகவே கற்றுக்கொண்டால் தடுக்கக் கூடாது. அதே கொள்கைதான் நமக்கும்.
ஆனால், உண்மையைப் புரிந்து கொள்ளாமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தடை ஏற்படும் எனத் தெரிந்தும், தினமும் ஜிப்மர் வாசலில் நின்று போராட்டம் நடத்துவதும், ஒலிபெருக்கி வைத்து நோயாளிகளை தொந்தரவு செய்வதும் கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து.
இந்தி இசையா
அதற்காக, தமிழ்ப்பற்று உனக்கு கிடையாதா? நீ என்ன இந்தி இசையா? என ட்விட்டரில் கேட்கிறார்கள். எங்களை விட தமிழ்ப்பற்று உள்ளவர்கள் யாரும் இருக்க முடியாது என்கிற அளவுக்கு நாங்கள் தமிழ்ப்பற்று உள்ளவர்கள். தமிழில் தான் பதவியேற்றேன், தமிழில் ஆளுநர் உரை ஆற்றியிருக்கிறேன்.
எப்போதுமே இன்னொரு மொழியின் மீது துவேஷம் இருக்கக்கூடாது. நமது தாய்மொழியை நாம் மதிப்பதைப் போலவே இன்னொரு மொழியையும் மதிக்க வேண்டும். அது வேறொருவருக்கு தாய்மொழி. படிக்கிறோமா இல்லையா என்பதெல்லாம் இரண்டாவது தான். முதலில் மதிக்கவேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் சில கட்சிகள் எதிர்ப்பு கோஷமாக முன்வைத்து பிரிவினை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.