முழு ஊரடங்கு: அப்படியே சைக்கிளை எடுத்து.. 5 கி.மீ ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்.. வியந்து போன மக்கள்!
புதுக்கோட்டை: முழு ஊரடங்கு எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது? என்பதை அறிய புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். கலெக்டர் ஒருவர் சைக்கிளில் செல்வதை பார்த்த பொதுமக்கள் வியந்து போனார்கள்.
எல்காட் நிறுவன செயல் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி அருண்ராஜ் நியமனம் - 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 13,000-ஐ தாண்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆக்டிவ் கேஸ்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் தினமும் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலும் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
திடீரென சைக்கிளை எடுத்த கலெக்டர்
மக்கள் ஊரடங்கை முறையாக கடைபிடிக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆய்வு செய்ய முடிவு செய்தார். இதனை தொடர்ந்து திடீரென சைக்கிளை எடுத்த அவர் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அவர் கீழராஜவீதி, பால் பண்ணை, மகளிர் கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று ஆய்வு செய்தார்
5 கி.மீ சைக்கிளில் பயணம்
உணவகங்கள் பார்சல் மட்டும் வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு மேற்கொண்டார். பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலர்களிடம் விதிகளை மீறியவர்கள் மீது எவ்வளவு வழக்குகள் போடப்பட்டு உள்ளது? என்று கேட்டறிந்தார். மொத்தம் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை சைக்கிளில் சென்று ஆய்வு செய்த அவர் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றியவர்களிடம் ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வியந்து போன மக்கள்
முகக் கவசம் இல்லாமல் சாலைகளில் நடந்து வந்தவர்களிடம் மாஸ்க் அளித்து மாஸ்க் இல்லாமல் வெளியே வரக்கூடாது என்று அறிவுரை கூறினார் கலெக்டர் கவிதா ராமு. கலெக்டர் ஒருவர் சைக்கிளில் செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள் வியந்து போனார்கள்.