பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த தாய் மகள்.. ராமநாதபுரத்தில் அதிகாலையில் நடந்த விபரீதம்
ராமநாதபுரம்: பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு விடுமுறைக்காக வந்த தாய், மகள் ராமநாதபுரம் அருகே திருவாடானையில் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். பெங்களூர், சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு போய் உள்ளார்கள். அப்படி சொந்த ஊருக்கு போன தாய் மகள் நீரில் மூழ்கி இறந்து போனார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அழகமடை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம் , இவருக்கு 41 வயது ஆகிறது. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (40). இவர்களது மகள் ஹன்சினி (11), மகன் பிரணவன் (7).ஹன்சினி பெங்களூரில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
பெங்களூரில் இருந்து விடுமுறைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழகமடை வந்துள்ளார்கள். இந்நிலையில் நேற்று அதிகாலையில் ராஜேஸ்வரி, தனது மகள் ஹன்சினியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள குளத்தில் குளிக்க போய் இருக்கிறார். இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவே இல்லை.
இதனால் சந்தேகம் அடைந்த ராஜாராம் மற்றும் உறவினர்கள் குளத்திற்கு சென்று பார்த்துள்ளளார்கள். அப்போது ராஜேஸ்வரி தண்ணீரில் பிணமாக மிதந்ததை பார்த்து அதிர்ந்துபோனார்கள். உடனடியாக கண்மாயில் இறங்கி ராஜேஸ்வரியின் உடலை மீட்டார்கள். ஹன்சினியை காணவில்லை. கண்மாயில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால் சிறுமியை தேடிக்கண்டுபிடிக்க முடியாமல் திணறினர்
இது குறித்து தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து, கண்மாயில் இறங்கி ஹன்சினியை தேடினர். அப்போது குளத்தில் ஆழமான பகுதியில் சகதியில் ஹன்சினியின் உடல் சிக்கி இருந்தது தெரிந்தது. அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ராஜேஸ்வரியும், ஹன்சினியும் குளிக்கும்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தது திருவாடனை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் அதிகம் இருக்கும் என்பதால், ஆறு, குளங்களில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது. குளங்களை பொறுத்தவரை சேரு அதிக அளவில் இருக்கும். அவை தான் உயிரை பறித்துவிடுகிறது. எனவே குளங்களில் குளிக்கும் போது கவனமாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications