மொத்தமாக "டீமை" அனுப்பிய ஸ்டாலின்.. சென்னையில் இருந்தபடியே சம்பவம்! எதிர்பார்க்காத அதிமுக.. ட்விஸ்ட்
ராமநாதபுரம்: பசும்பொன்னில் நடக்கும் தேவர் ஜெயந்தி குரு பூஜையில் ஆளும் திமுகவை சேர்ந்த பெரும்பான்மையான அமைச்சர்கள் கலந்து கொண்டு உள்ளனர். திமுக சார்பாக பல்வேறு நிர்வாகிகள் இந்த ஜெயந்தியை கலந்து கொண்டுள்ளனர்.
முத்துராமலிங்கத்தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குரு பூஜை நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக்கும் இந்த விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சென்று வருகின்றனர்.
பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் இந்த விழா தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.

பாதுகாப்பு
இதற்காக பிரம்மாண்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. டிரோன் மூலம் போலீசார் தீவிர ரோந்து பணிகளை செய்து வருகின்றனர். அதேபோல் களத்தில் 1000க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர். தேவர் சிலைக்கு மரியாதை செய்து வழிபாடு நடத்துவதற்காக மக்கள் பசும்பொன் நோக்கி படையெடுத்து உள்ளனர். பல அரசியல் தலைவர்கள், அமைப்பு தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

திமுக
இந்த முறை திமுக சார்பாக முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் திடீரென கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதோடு முதுகு வலியும் ஏற்பட்டது. இதனால் அவரை ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இதனால் முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் செல்லவில்லை. ,மாறாக அவர் நந்தனத்தில் இருக்கும் தேவர் சிலைக்கு மரியாதையை செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.

அமைச்சர்கள்
இந்த நிலையில் எதிர்பார்க்காத அளவிற்கு பசும்பொன்னில் நடக்கும் தேவர் ஜெயந்தி குரு பூஜையில் ஆளும் திமுகவை சேர்ந்த பெரும்பான்மையான அமைச்சர்கள் கலந்து கொண்டு உள்ளனர். திமுக சார்பாக பல்வேறு நிர்வாகிகள் இந்த ஜெயந்தியை கலந்து கொண்டுள்ளனர். திமுக சார்பாக அமைச்சர்கள் கே.என் நேரு, ஐ பெரியசாமி, துரைமுருகன், அன்பில் மகேஷ், எம்எல்ஏ டிஆர்பி ராஜா, எம்பி தங்கம் தென்னரசு உள்ளிட்ட பெரிய டீம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இன்னும் பல திமுக எம்எல்ஏக்கள் இந்த நிகழ்விற்கு வந்தனர்.

எம்எல்ஏ
முதல்வர் ஸ்டாலின்தான் பசும்பொன் வரவில்லை என்றாலும் மொத்தமாக அமைச்சர்கள் டீமை பசும்பொன் நோக்கி அனுப்பி வைத்து இருக்கிறார். ஆனால் எப்போதும் அதிமுக சார்பாக இங்கு பிரம்மாண்டமாக நடத்தப்படும் கொண்டாட்டங்கள் இன்று ஆர்ப்பாட்டம் இன்றி காணப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் வரவில்லை. அவர் நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செய்தார். அதிமுக சார்பாக திண்டுக்கல் ஸ்ரீநிவாசன், செல்லூர் ராஜு ஆகியோர் சென்று மரியாதை செய்தனர். ஆனால் இவர்களுக்கும் பெரிதாக வரவேற்பு இல்லை.

வரவேற்பு
இவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இங்கே வரவேற்பு கொடுக்கப்படவில்லை. ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அங்கு அதிகம் இருந்ததால் எடப்பாடி அணிக்கு வரவேற்பு இல்லை. பாஜக சார்பாகவும் இங்கே பெரிதாக தலைவர்கள் வரவில்லை. இதனால் திமுக சார்பாக கொடுக்கப்பட்ட மரியாதை இன்று அதிகம் கவனிக்கப்பட்டது. அதிலும் மொத்தமாக திமுக அமைச்சர் படையே பசும்பொன்னிற்கு வந்தது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இடையே கவனத்தை பெற்றது.












Click it and Unblock the Notifications