நிற்காமல் சென்ற படகு..துப்பாக்கியால் சுட்ட இந்திய கடற்படை..தமிழக மீனவர் படுகாயம் - காரணம் என்ன?
ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மீனவர் படுகாயமடைந்தார். காயமடைந்த மீனவர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படகு நிற்காமல் சென்றதால் எச்சரிக்கை செய்வதற்காக சுட்டதாக இந்திய கடற்படை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் நடுக்கடலில் விசைப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்கள் விசைப்படகை நிறுத்தச் சொல்லி சிக்னல் காட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது படகு நிற்காமல் சென்றதால் சந்தேகம் அடைந்த கடலோர காவல்படையினர் படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் வீரவேல் என்பவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் காயமடைந்த மீனவர் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களிடம் நடத்திய விசாரணையில் இருட்டாக இருந்ததால் சிக்னலை கவனிக்காமல் சென்றதாக தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட மீனவர் வீரவேல் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன் என்று இந்திய கடற்படை விளக்கம் அளித்துள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியில், சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற படகை நிறுத்தக் கூறினோம். படகு நிற்காததால், எச்சரிக்கை செய்ய துப்பாக்கியால் சுடப்பட்டதாக இந்திய கடற்படை கூறியுள்ளது. இதனை தொடர்ந்து காயமடைந்த நபரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். இது குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது எனவும் இந்திய கடற்படை விளக்கமளித்துள்ளது.