பிரசாரத்திற்கு வராத வேட்பாளர்.. நமீதா டென்சன் - ஆளை விடுங்க என கும்பிட்டு விட்டு சென்னைக்கு எஸ்கேப்
தமிழகத்தில் தாமரை மலரும் என்று போகும் இடமெங்கும் பாஜக வேட்பாளர்களுக்கு கொஞ்சி கொஞ்சி பேசி வாக்கு சேகரித்து வருகிறார் நமீதா. அவரையே டென்சன் ஆக்கியுள்ளார் ஒரு பாஜக வேட்பாளர்.
ராமநாதபுரம்: மக்களே... தாமரைக்கு வோட் போடுங்க... தாமரை மலரும் வாழ்க்கை ஒளிரும் என்றெல்லாம் கொஞ்சி கொஞ்சி வாக்கு சேகரித்து வந்த நடிகை நமீதா திடீர் என்று டென்சன் ஆகி எங்களை ஆளை விடுங்க நாங்க சென்னைக்கு போறோம் என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு கிளம்பிவிட்டார் . அவரது டென்சனுக்குக் காரணம் பிரசாரத்திற்கு போன இடத்தில் வேட்பாளர் வராமல் போனதுதான். ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளர் குப்புராம்தான் நமீதாவை டென்சன் ஆக்கிய வேட்பாளர்.
நடிகை நமீதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இணைந்த நமீதா தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் செய்து வந்தார்.
அவரது பேச்சை கேக்கவே வாக்காளர்கள் கூடுகின்றனர். காஞ்ச மண்ணு பச்சை மண்ணா மாற தாமரைக்கு வோட் போடுங்க என்று துண்டு சீட்டில் எழுதி வைத்து பேச கூட்டம் கை தட்டி ஆராவாரம் செய்கிறது.
மச்சான் வோட் போடுங்க
மதுரையில் சில தினங்களுக்கு முன்பு வடக்குத் தொகுதி வேட்பாளர் சரவணனுக்கு வாக்கு சேகரித்த நமீதா, மை டியர் மச்சான்ஸ் தாமரைக்கு வோட் போடுங்க. மதுரையில் தாமரை மலரும் என்று பேசினார். அப்போது பிரசார வாகனத்தில் வேட்பாளர் சரவணனும் நின்று கொண்டு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளிலும் வாக்கு சேகரித்தார் நமீதா. அவர் அதிகமாக பேசாவிட்டாலும் அவர் ஓட்டு கேட்கும் அழகு அலாதி ரகம்தான். தான் போகும் இடங்களில் எல்லாம் தனது கணவரையும் கூடவே அழைத்துச்செல்கிறார்.
தியானம் செய்த நமீதா
ராமநாதபுரம் சட்டசபைத் தொகுதி பாஜக வேட்பாளர் குப்புராமுக்கு ஆதரவாக ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் நடிகை நமீதா 4 இடங்களில் நேற்று பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வெயில் காலமாக இருப்பதால் சீக்கிரமே பிரசாரத்திற்கு கிளம்பி விடுகிறார் நமீதா. கோவிலுக்கு சென்று கணவருடன் சாமி கும்பிட்டு விட்டு தியானம் செய்தார்.
வேட்பாளர் இல்லாமல் பிரசாரம்
முதல் இடமான மருதுபாண்டியர் சிலை அருகே காலை 9 மணிக்கு வேட்பாளர் வராததால் அங்கு பிரச்சாரத்தை ரத்து செய்தார் நமீதா. சில மணி நேரத்தில் தேவர் சிலை மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே பிரசாரத்தை ஆரம்பித்தார் நமீதா. அங்கும், வேட்பாளர் வரவில்லை என்ற போதிலும், தமிழக மீனவர்களுக்கு பிரதமர் மோடி செய்த உதவிகளை பட்டியலிட்டு பேசினார்.
சில மணி நேரத்தில் தேவர் சிலை மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே பிரசாரத்தை ஆரம்பித்தார் நமீதா. அங்கும், வேட்பாளர் வரவில்லை என்ற போதிலும், தமிழக மீனவர்களுக்கு பிரதமர் மோடி செய்த உதவிகளை பட்டியலிட்டு பேசினார்.
பாஜகவிற்கு வாக்களியுங்கள்
பாஜகவுக்கு வாக்களித்தால் என்ன வந்துவிட போகிறது என்று எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். அதற்கு எங்களிடம் நல்ல பதில் இருக்கிறது. வருடத்துக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசமாக தருவோம். அதில் நீங்கள் உங்களுக்கு பிடித்த பிரியாணி செய்து சாப்பிடலாம். என்னை சாப்பிட அழைத்தால் நானும் உங்கள் வீட்டுக்கு வருவேன் என்று கூறினார். ராமநாதபுரத்தில் தாமரை மலரும் என்றும் கூறினார்.
வேட்பாளர் வரலையே
மாலையில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போதும் பாஜக வேட்பாளர் குப்புராம் வராததால், டென்சன் ஆன நடிகை நமீதா பிரச்சார பயணத்தை ரத்து செய்து விட்டு தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பினார்.
எஸ்கேப் ஆன நமீதா
இதனால் செய்வதறியாக தவித்த பாஜகவினர் நமீதா தங்கியிருந்த அறைக்குச் சென்று மீண்டும் ராமநாதபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தனர். அப்போது நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி வேட்பாளர் இல்லாமல் இனிமேல் வாக்கு சேகரிக்க எங்களை அழைக்க வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டார். எங்களை ஆளை விடுங்க நாங்கள் சென்னை செல்கிறோம் என்று கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனராம்.