பரபரக்கும் பசும்பொன்! முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் வருகிறார் பிரதமர் மோடி! பாஜகவினர் உற்சாகம்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி பசும்பொன் வரவுள்ளதாக வேகமாக தகவல் பரவி வரும் நிலையில், தமிழக பாஜகவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதனிடையே முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன் கிராமத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை கவனித்து வருகிறது.

முத்துராமலிங்கத் தேவர்
தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக கொண்டு வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். ஆண்டுதோறும் அக்டோபர் 28,29,30 ஆம் தேதிகளில் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி சிறிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரை முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அக்டோபர் 30ஆம் தேதி அன்று மரியாதை செலுத்துவார்கள்.

பிரதமர் மோடி
அந்த வகையில் இந்தாண்டு நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 30 அன்று பிரதமரின் தமிழகம் வருகை 90% உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும் இன்னும் ஓரிரு நாட்களில் முழு பயணம் விவரம் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. டெல்லியில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் கிராமத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறை தீவிரம்
இதனிடையே தமிழக காவல்துறை தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாதி அமைப்பினர், அரசியல் கட்சியினர், முக்கியத் தலைவர்கள் என பலதரப்பட்டோரும் அக்டோபர் 30ஆம் தேதி அன்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு வருகை தரவுள்ளதால் எந்த அசம்பாவித நிகழ்வுகளும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனிடையே பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்க தமிழக பாஜக தயாராக இருக்கிறது.

மோடி புகழாரம்
கடந்தாண்டு முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளன்று அவர் குறித்து பதிவு வெளியிட்டிருந்த பிரதமர் மோடி, மக்கள் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர் என்றும் மேலும் துணிச்சலும், கனிவும் கொண்ட உள்ளத்துக்குச் சொந்தக்காரர் எனவும் புகழாரம் சூட்டியிருந்தார். பிரதமர் ஒருவர் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு வருகை தருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications