தனுஷ்கோடிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை வரவழைக்கும் மோடி-சீனாவுக்கு எதிராக நடுக்கடல் வியூகம்
ராமேஸ்வரம்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய பயணத்தின் போது ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடிக்கு வருகை தரக் கூடும் என தெரிகிறது. போரிஸ் ஜான்சன் பயண ஏற்பாடுகள் தொடர்பாக இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் பாதுகாப்பு ஆய்வுகளை நடத்தியும் உள்ளனர்.
தேசத்தின் குடியரசு தின சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் பங்கேற்க இருந்தார். ஆனால் கொரோனா உச்சத்தில் இருந்ததால் போரிஸ் ஜான்சன் தமது பயணத்தை ரத்து செய்தார்.
இந்த நிலையில் ஏப்ரல் மாதம் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவது உறுதியாகி உள்ளது. பிரதமர் மோடியுடன் போரிஸ் ஜான்சன் எங்கு சந்தித்து பேசப் போகிறார் என்பது உறுதி செய்யப்படவில்லை. ஏற்கனவே சீனா அதிபர் ஜின்பிங் இந்தியா வருகை தந்த போது மாமல்லபுரத்தில் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
தனுஷ்கோடி வருகை?
இதேபோல் போரிஸ் ஜான்சனும் இந்த முறை தமிழகத்துக்கு அழைத்துவரப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மதுரைக்கு விமானம் மூலம் வருகை தரும் போரிஸ் ஜான்சன், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கடற்படை விமான தளத்துக்கு அழைத்து வரப்படுவார். பின்னர் கார் மூலமாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி நகரங்களை பார்வையிடலாம். தனுஷ்கோடியில் இந்தியாவின் தென்கோடி முனை தொடங்கும் அரிச்சல்முனை பகுதியையும் போரிஸ் ஜான்சன் பார்வையிடக் கூடும். தனுஷ்கோடியில் பிரதமர் மோடியுடன் போரிஸ் ஜான்சன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடும்.
தனுஷ்கோடியை தேர்ந்தெடுப்பது ஏன்?
தனுஷ்கோடியை பிரதமர் மோடி ஏன் தேர்ந்தெடுக்கிறார்? என்பது தொடர்பாக டெல்லி வட்டாரங்களில் விசாரித்தோம். அப்போது, போரிஸ் ஜான்சன் வருகையின் போது இங்கிலாந்து உதவியுடன் கடலில் மிக பிரமாண்ட காற்றாலை அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. அரபிக் கடல் பகுதி எனில் மகாராஷ்டிராவிலும் வங்க கடல் எனில் தமிழ்நாட்டிலும் இந்த காற்றாலை நிறுவப்படும்.
இலங்கை தீவுகளில் சீனா
இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் அண்மையில் கச்சத்தீவு அருகே அதாவது ராமேஸ்வரத்தில் இருந்து 2 மணிநேர கடல் பயணத்தில் உள்ள கச்சத்தீவு அருகே இலங்கைக்கு சொந்தமான 3 தீவுகளில் பிரமாண்ட காற்றாலைகளை அமைக்கும் திட்டத்தை சீனாவுக்கு இலங்கை கொடுத்தது. இந்த காற்றாலை திட்டத்தை இந்தியாதான் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் சீனா இந்த திட்டத்தை கைப்பற்றியது.
சீனாவுக்கு செக் வைக்கும் மோடி
இதன்மூலம் மன்னார் வளைகுடா பிராந்தியத்தில் சீனா காலூன்றுகிறது. இது இந்தியாவின் கேந்திர பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். இலங்கை- சீனா மூலமான இந்த அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில்தான் தனுஷ்கோடி கடற்பரப்பில் மிக பிரமாண்டமான காற்றாலை திட்டத்தை இங்கிலாந்து உதவியுடன் செயல்படுத்த பிரதமர் மோடி வியூகம் வகுத்துள்ளார் என்கின்றனர்.
தூதரக அதிகாரிகள் ஆய்வு
இதனிடையே டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் உச்சிப்புளி கடற்படை விமான தளம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய இடங்களைப் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு நடத்தி இருக்கின்றனர். இதனால் போரிஸ் ஜான்சன் தனுஷ்கோடி வருவது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.
தமிழக மீனவர்களுக்கு நெருக்கடி?
ஏற்கனவே கச்சத்தீவு பகுதியில் தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவின் பாதுகாப்புக்காக பிரமாண்ட காற்றாலை திட்டம் நடுக்கடலில் உருவாக்கப்பட்டால் எஞ்சியிருக்கும் பாரம்பரிய உரிமையும் பறிபோய்விடுவோமோ என்கிற அச்சமும் எழுந்துள்ளது.