தடையை மீறி ஊர் சுத்துரீங்களா.. கொரோனா டெஸ்ட் எடுத்துட்டு போங்க.. சேலத்தில் தெறிக்க விட்ட அதிகாரிகள்
சேலம் : சேலத்தில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதைக் கண்டு மற்றவர்கள் தெறித்து ஓடினர்..
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒருநாள் பாதிப்பு 30 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு ஜனவரி 31 வரை அமலில் உள்ளது.
மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 3வது ஞாயிற்றுக்கிழமையாக இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நேற்று இரவு 10 மணிக்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் நாளை காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் முக்கிய வீதிகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. நகர் மற்றும் கிராம பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகள் கருதி பால் கடைகள், மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. உணவகங்களில் பார்சல் வழங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெறிசோடிய சேலம்
அதன்படி சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பால், மருந்தகம் தவிர இதர கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. ஹோட்டல்களில் பார்சல் சேவை மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் பிரதான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

கொரோனா சோதனை
ஊரடங்கை மீறி உலாவந்த வாகன ஓட்டிகளை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். மேலும் அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித்திரிந்த நபர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

போலீசார் எச்சரிக்கை
கொரோனா உறுதி செய்யப்பட்டால் நேரிடையாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அல்லது வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து அருகில் இருந்த நபர்கள் தலைதெறிக்க ஓடினர். சேலத்தில் தடையை மீறி ஊர் சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications