அதிமுக 3 ஆம் கட்ட அமைப்புத் தேர்தல்.. நேரில் ஆய்வு செய்ய சேலத்திற்கு பறந்த எடப்பாடி.. விறுவிறு
சேலம் : தொடர் தேர்தல்கள், உள்கட்சிப்பூசல்களால் துவண்டு போயிருக்கும் அதிமுகவின் 3வது கட்ட அமைப்பு தேர்தலை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாடாளுமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் என அடுத்தடுத்து படுதோல்விகளை சந்தித்து வருகிறது தமிழ்நாட்டை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அதிமுக.
சசிகலாவுக்கு ஒரு பக்கம் ஆதரவு அதிகரித்து வருவதால் ஏற்பட்டு உள்ள உள்கட்சிப்பூசல் பெரிய சிக்கலாக உருவெடுத்து இருக்கிறது.

அதிமுக அமைப்புத் தேர்தல்
இந்த சூழலில்தான், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக்கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்டக்கழக நிர்வாகிகளுக்கான அமைப்புத் தேர்தலுக்கான 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

3 ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு
டிசம்பர் 13, 14 ஆம் தேதிகளில் முதல் கட்ட தேர்தலும், டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 2 ஆம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற இருந்த 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி, பகுதி நிர்வாகிகள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

எந்தெந்த மாவட்டங்களில் தேர்தல்?
கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு, கரூர், ராணிப்பேட்டை, வேலூர் மாநகர், வேலூர் புறநகர், திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, கள்ளக்குறிச்சி, சேலம் புறநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு ஆகிய 25 மாவட்டங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு
சேலம் புறநகர் மாவட்டத்தில் அதிமுக ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி நிர்வாகிகளுக்கான அமைப்புத் தேர்தல் ஓமலூரில் 2 இடங்களில் நடைபெற்றது. இதனை முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தேர்தல் பொறுப்பாளர்களாக செயல்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரிடம் தேர்தல் நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி வினவினார்.

தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள்
ஈரோடு புறநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 3 இடங்களில் அதிமுக அமைப்புத் தேர்தல் நடைபெற்றது. அங்கு தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் செயல்பட்டார்.












Click it and Unblock the Notifications