''இதற்காகத் தான் காத்திருந்தேன்..' - தீர்ப்புக்கு பின் கோகுல்ராஜின் தாயார் கண்ணீர் பேட்டி
சேலம்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10பேரை குற்றவாளியாக அறிவித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது இந்த தீர்ப்புக்காக உயிரோடு காத்திருந்தேன் என கோகுல்ராஜ் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ். பி.இ. பட்டதாரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவரும், கல்லூரியில் உடன் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதி என்ற மாணவியும் நெருங்கி பழகி வந்தனர். சுவாதி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்.
கடந்த 2015ம் ஆண்டு வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிச்சென்ற கோகுல்ராஜ் மறுநாள் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.

வழக்கு
சிசிடிவி கேமராக்கள் மூலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய தடயங்கள் கிடைத்தன. அதன்பேரில், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். ஒருவர் தலைமறைவானார். வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால், கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார்.

தீர்ப்பு
இந்த வழக்கில் முதல் குற்றவாளி யுவராஜ். இந்த கொலை வழக்கில் சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறிவிட்டனர். கோகுல்ராஜ் உடன் கூட இருந்த சுவாதியும் பிறழ் சாட்சியாக மாறினார். இந்நிலையில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என்றும், தொடர்புடைய 5 பேர் விடுதலை செய்தனர். மேலும் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு தண்டனை விவரம் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கண்ணீர் பேட்டி
கோகுல்ராஜின் தாயார் சித்ரா, தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, '' 10பேரை குற்றவாளியாக அறிவித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது இந்த தீர்ப்புக்காக உயிரோடு காத்திருந்தேன் , 10பேருக்கும் தூக்குதண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். விடுதலை செய்யப்பட்டவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்தேன்.

கோகுல்ராஜ்
கோகுலை கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன். என் எல்லா பிள்ளைகளையும் நன்றாக படிக்கவைத்தேன். என்ன பாவம் செய்தான் என என் மகனை இவ்வளவு கொடூரமாக கொன்றிருக்கிறார்கள். எங்கு சென்றாலும் பயம் தான் கூட வருகிறது. இன்னும் நாங்கள் அச்சத்தோடு தான் வாழ்ந்து வருகிறோம். எங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு வேண்டும்'' என கோகுல்ராஜின் தாயார் சித்ரா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications