இங்க வந்துட்டு எடப்பாடியை பத்தி பேசலனா எப்படி? ரவுண்டு கட்டிய உதயநிதி ஸ்டாலின்! ஆஹா.. மாநாடு மாதிரி!
சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை ரவுண்டு கட்டி விளாசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
சேலம் : எடப்பாடி பழனிசாமியின் கோட்டையான சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திமுக கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தன்னை அரசியலில் ஆளாக்கிய ஜெயலலிதாவிற்கும், சசிகலாவிற்குமே எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை. கட்சித் தொண்டர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கும் அவர் உண்மையாக இல்லை. அவர் உண்மையாக இருப்பது மோடி, அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோருக்கு மட்டும்தான்." என விளாசினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள குறும்பபட்டியில் திமுக சார்பில் 1000 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார்.
எடப்பாடி பழனிசாமியின் கோட்டையான சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டம் பெரிய மாநாடு போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சேலத்திற்கு எப்போது வந்தாலும்
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சேலத்திற்கு எப்போது வந்தாலும் வரவேற்பு பெரிதாக உற்சாகமாகவும் எழுச்சியாகவும் இருக்கும். கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். மீண்டும் அந்த தவறை செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் கொடுக்கும் வரவேற்பும் எழுச்சியும் நம்பிக்கை அளிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சேலத்திற்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார். அமைச்சர் கே.என்.நேரு, சேலம் மாவட்டத்தையும் திமுகவின் கோட்டையாக மாற்றிக் காட்டுவார் என்று நம்புகிறேன்.

கோட்டையாக மாற்றுவோம்
திமுகவினர் கட்சிப் பணியில் ஈடுபட்டு, சேலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும். இதுவரை 20 மாவட்டங்களில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவை நடத்தி முடித்துவிட்டோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவை நடத்திக் காட்டுவோம்." என உறுதிபடக் கூறினார்.

எடப்பாடிக்கு வந்துட்டு அவரை பத்தி பேசாம
அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமியை ரவுண்டு கட்டி விளாசத் தொடங்கினார் உதயநிதி. அவர் பேசுகையில், "எடப்பாடிக்கு வந்துவிட்டு எடப்பாடி பழனிசாமி பற்றி பேசாமல் போய்விட்டால் அவர் கோபித்துக் கொள்வார். தன்னை அரசியலில் ஆளாக்கிய ஜெயலலிதாவிற்கும், சசிகலாவிற்குமே அவர் உண்மையாக இல்லை. கட்சித் தொண்டர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கும் அவர் உண்மையாக இல்லை. எடப்பாடி பழனிசாமி உண்மையாக இருப்பது மோடி, அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோருக்கு மட்டும்தான்.

பயந்துட்டாங்க
தமிழ்நாடு ஆளுநர் அவருக்கு பிடித்த வார்த்தைகளை வைத்துவிட்டு, மற்ற வார்த்தைகளை விட்டுவிட்டார். இதனால் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில், ஆளுநர் இருக்கும்போதே அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். ஆளுநருக்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி, மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேறிவிட்டனர். ஆளுநரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் என்று அதிமுகவினர் பயந்துவிட்டார்கள்." எனப் பேசினார்.

உங்கள் முகத்தில்
மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை மக்கள் தேடி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தந்தை பெரியார், அண்ணா இவர்களை நான் நேரில் பார்த்தது கிடையாது. மூத்த முன்னோடிகள் அவருடன் பயணித்து இருப்பார்கள். உங்கள் முகத்தில் அவர்களைப் பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற இந்தக் கூட்டம் பெரும் மாநாடு போல ஏற்பாடு செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தது திமுகவினருக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications