சேலம் இரண்டடுக்கு மேம்பாலம் மூடல்.. ஏற்காடு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன! பரபரக்கும் மாவட்ட நிர்வாகம்
சேலம்: புத்தாண்டில் விபத்தைத் தடுக்க சேலத்தில் இரண்டடுக்கு மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
புத்தாண்டு இன்று இரவு பிறப்பதால் சேலம் மாநகரத்தில் முக்கிய சந்திப்புகளில் கூடுதலாக போலீசார் நின்று கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புத்தாண்டில் சாலை விபத்து இல்லாமல் செய்ய சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் இரண்டடுக்கு மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
சேலத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை அமல்படுத்தப்படுகிறது . மனமகிழ் மன்றங்களில் இயங்கும் மதுபான விடுதி மற்றும் நட்சத்திர விடுதிகளில் இயங்கும் அனைத்து வகை மதுபானக் கூடங்கள் இன்று இரவு 10 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை. புத்தாண்டை முன்னிட்டு சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி , குரங்குசாவடி பைபாஸ், 5 ரோடு, 4 ரோடு சந்திப்பு, அண்ணா பூங்கா, அஸ்தம்பட்டி , கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்படும்.
பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுபவர்கள் தடையை மீறி சாலைகளில் வேகமாக வாகனம் ஓட்டினாலும், போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்றாலும் வாகனம் பறிமுதல் செய்யப்படும். சேலம் ஐந்து ரோடு சென்னை சில்க்ஸ் முதல் ராமகிருஷ்ணா சாலை வரையிலும், குரங்குசாவடி முதல் ஐந்து ரோடு வழியாக 4ரோடு வரையிலான புது மேம்பால சாலை களில் இன்று இரவு 11 மணிமுதல் நாளை காலை 4 மணிவரை பாதுகாப்பு கருதி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு சேலம் மாநகர காவல் செந்தில்குமார் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதேபோல சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன. ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆறு மாத காலமாக இந்த சுற்றுலாத்தலம் மூடப்பட்டு அன்மையில் திறக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்காடு பகுதியிலுள்ள அண்ணா பூங்கா தாவரவியல் பூங்கா படகு இல்லம் பக்கோடா பாயிண்ட் சேர்வராயன் கோயில் லேடிஸ் சிட்ஸ் ஜென்ஸ் சீட் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் 31.12.2020 இன்று மாலை முதல் 01 01 2021 மாலைவரை மூடப்படுவதாக சேலம் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications