அனுமதியின்றி போராட்டம்.. கொரோனா பரவ காரணம் உட்பட 3 பிரிவுகளில் ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு
சேலம்: திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், கொரோனா விதிகளை மீறுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்,
திமுக தனது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்திய நீட் ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகக் குற்றஞ்சாட்டி அதிமுக சார்பில் நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், முறையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கையைப் பின்பற்றி போராட்டம் நடத்தப்பட்டது. அதிமுக நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பும், அரசு அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்தினர்.
தேனியில் இந்தப் போராட்டத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார், அதேபோல சேலத்தில் இந்தப் போராட்டம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அவருடன் ஏராளமான நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உட்பட 90 அதிமுக நிர்வாகிகள் மீது சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், பேரிடர் காலத்தில் ஒன்று கூடுதல், கொரோனா பரவ காரணமாக இருத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 19 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ள நிலையில், இது தொடர்பாக மொத்தம் 2000க்கும் அதிகமான அதிமுக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.