அவ உனக்கு தங்கச்சி முறை! அவ மேல ஆசைப்படக் கூடாது! காதலை எதிர்த்த தந்தை, சித்தி கொலை! சேலத்தில் ஷாக்!
சேலம்: சேலம் இளம்பிள்ளை அருகே தந்தையையும் அவரது 2ஆவது மனைவியையும் துண்டு துண்டாக வெட்டி மூட்டையில் கட்டி ஏரியில் வீசிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவலை தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (47). இவரது முதல் மனைவி ஜெயந்தி. இவரது மகன் ஆகாஷ். பழனிசாமி அடிக்கடி குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஜெயந்தி, பழனிசாமியை பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது.

இவர்களது மகன் ஆகாஷ், கோழிக் கடையில் வேலை செய்து வந்தார். தனது தந்தையுடன் அவர் தங்கியிருந்தார். இந்த நிலையில் பழனிசாமி வேறு சமூகத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
18 வயது மகள்
ஜெயலட்சுமிக்கு ஏற்கனவே 18 வயதில் கனகவள்ளி என்ற மகள் உள்ளாராம். அவரும் தனது தாயுடன் பழனிசாமி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஆகாஷ், கடந்த 16 ஆம் தேதி முதல் தனது தந்தை பழனிசாமியையும் சித்தி ஜெயலட்சுமியையும் காணவில்லை என போலீஸில் புகார் அளித்தார்.
விசாரணை
மேலும் எவ்வளவு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புகாரின்பேரில் விசாரணையை முன்னெடுத்த போலீஸாருக்கு ஆகாஷுக்கும் அவரது தந்தை பழனிசாமிக்கும் காதல் விவகாரம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது தெரியவந்தது.
இரு சக்கர வாகனம்
மேலும் 17ஆம் தேதி அதிகாலை ஆகாஷ் தனது இரு சக்கர வாகனத்தில் இரு மூட்டைகளை எடுத்துச் சென்றதும் அங்கு வசிப்போர் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரித்த போது தான் கோழிக் கடையில் வேலை செய்வதால் அதன் கழிவுகளை எடுத்துச் சென்றேன் என ஆகாஷ் தெரிவித்தார்.
ஆகாஷ் காதலி யார்
இதையடுத்து ஆகாஷ், காதலிக்கும் பெண் யார் என்பதை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெண் வேறுயாருமில்லை. தனது தந்தையின் 2ஆவது மனைவி ஜெயலட்சுமிக்கும் அவரது முதல் கணவருக்கும் பிறந்த கனகவள்ளி என்பது தெரியவந்தது.
தங்கை முறை
இருவரும் காதலிப்பதாக கூறி தனிமையில் இருந்ததை ஜெயலட்சுமி பார்த்துவிட்டு இவர்களது காதலுக்கு தடை விதித்தார். அது போல் பழனிசாமியும் , "டேய் அவ உனக்கு தங்கச்சி முறை" என பழனிசாமியும் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
ஆத்திரத்தில் கனகவள்ளி
இதனால் அவர்கள் இருவர் மீதும் ஆகாஷும், கனகவள்ளியும் ஆத்திரத்தில் இருந்தனர். இதனால் அவர்களை கொலை செய்ய திட்டமிட்ட ஆகாஷ், போதையில் படுத்துக் கொண்டிருந்த பழனிசாமியின் கழுத்தை கோழி வெட்டும் கத்தியால் வெட்டினார்.
சப்தம் கேட்டு எழுந்த ஜெயலட்சுமி
அப்போது சப்தம் கேட்டு ஜெயலட்சுமி எழுந்த நிலையில் அவரது கழுத்தையும் அறுத்து இருவரது உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி கோணி பையில் கட்டி ஏகாபுரம் ஏரியில் வீசியதாக போலீஸில் ஆகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
போலீஸார் விசாரணை
சடலம் வீசிய இடத்தை காட்டுமாறு ஆகாஷை அழைத்து சென்ற நிலையில் இரு மூட்டைகளும் தண்ணீரில் மிதந்த நிலையில் அவற்றை போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஆகாஷை கைது செய்து, கனகவள்ளியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications