ஸ்டாலின் துபாய்க்கு ஃபேமிலி டூர் போயிருக்காரு! அடித்து சொல்லும் எடப்பாடி பழனிசாமி
சேலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு துறை ரீதியான அமைச்சர்கள், அதிகாரிகளை அழைத்துச் செல்லாமல் குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா சென்று இருப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சரின் குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை துபாய்க்கு சென்றனர்.
அங்கு துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாட்டுக்கான அரங்கை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகள் குறித்து துபாய் அமைச்சர்கள், தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதிமுக அமைப்புத் தேர்தல்
இந்த நிலையில், சேலம் புறநகர் மாவட்டத்தில் அதிமுக ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி நிர்வாகிகளுக்கான அமைப்புத் தேர்தல் ஓமலூரில் 2 இடங்களில் நடைபெற்றது. இதனை முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சர் சென்றது குடும்ப சுற்றுலா
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. ஆனால், அவருடன் துறைசார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் சென்றதாக தெரியவில்லை. அவர் குடும்பத்தையே அழைத்து சென்று இருக்கிறார். எனவே முதலமைச்சரின் துபாய் பயணம் ஒரு குடும்ப சுற்றுலா.

நானும்தான் வெளிநாட்டு பயணம் சென்றேன்...
தமிழ்நாடு மக்களும் இது தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காகவா? அல்லது குடும்ப சுற்றுலாவா? என பேசுகிறார்கள். சர்வதேச வர்த்த கண்காட்சி தொடங்கி முடியும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டின் அரங்கத்தை தொடங்கி வைப்பது வேடிக்கையாக இருக்கிறது. நான் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் எனது பயணத்தை விமர்சனம் செய்தார். ஆனால், எனது பயணத்தில் துறைசார்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் என்னுடன் வந்தனர்.

துபாய் கண்காட்சியில் உள்ளது எல்லாம் அதிமுகவின் திட்டங்கள்
எங்கள் வெளிநாட்டுப் பயணத்தின் மூலமாக தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், அப்போது அது குறித்து மு.க.ஸ்டாலின் திட்டமிட்டே பொய் பிரச்சாரம் செய்தார். இம்முறை துபாய் சர்வதேச கண்காட்சியில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களே இடம்பெற்று இருக்கின்றன. அதை அனைவரும் காணலாம்.

எனக்கும் ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட பிரச்சனை இல்லை
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல் குற்றங்கள் அதிகரித்து இருக்கின்றன. மு.க.ஸ்டாலினுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அரசியல் ரீதியாக நாங்கள் எதிர்கருத்துக்களை சுமத்தி வருகிறோம். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு எக்ஸ்பிரஸ் வே என்று பெயர் மாற்றி அதை கொண்டு வர திமுக அரசு முயற்சித்து வருகிறது." என்றார்.












Click it and Unblock the Notifications