முன்னெச்சரிக்கை பலகையும் இல்லை.. பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கொத்தனார் பலி
சிவகங்கை: சிவகங்கை அருகே பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
எந்தவித முன்னெச்சரிக்கை பலகைகள் வைக்கப்படாததே இந்த விபத்துக்கு காரணம் என பொதுமக்ககள் குற்றம்சாட்டுகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்செட்டி பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன் (43). கொத்தனராக வேலை செய்து வந்தார். சிவகங்கையில் நடைபெறும் கட்டிடம் கட்டும் பணியில் வேலை செய்து வந்ததால் தினமும் திருப்பாச்செட்டியில் இருந்து சிவகங்கை வரை சேதுராமன் மோட்டார் சைக்கிளில் சென்று வந்தார். அந்த வகையில், நேற்று காலை வேலைக்கு சென்ற சேதுராமன், இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சிவகங்கை - மதுரை நெடுஞ்சாலையில் பனையூர் என்ற இடத்துக்கு வந்த போது அங்கு பாலப்பணிக்காக தோண்டப்பட்டிருந்த பெரிய பள்ளத்தில் சேதுராமன் விழுந்தார். இதில் அங்கிருந்த கட்டுமானக் கம்பிகளில் அவரது உடலில் பல இடங்களில் கிழித்தது. இதில் வலி தாங்க முடியாமல் சேதுராமன் அலறினார். ஆனால் இரவு நேரம் என்பதால் அவரை மீட்க யாரும் வரவில்லை. இதனால் சிறிது சிறிதாக அவரது உயிர் பிரிந்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை கட்டுமானப் பணிக்காக அங்கு வந்த தொழிலாளர்கள் சேதுராமனின் உடலை பார்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீஸார் உதவியுடன் சேதுராமனின் உடல் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரதேப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, கொத்தனார் விழுந்து உயிரிழந்த பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்துக்கு அருகே எந்தவித எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இரவு நேரத்தில் அங்கு வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுக்க ஒளிரும் பலகைகள் கூட அமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுவே சேதுராமன் உயிரிழந்ததற்கு காரணம் என அவரது உறவினர்கள் கூறுகின்றனர். இதேபோல, மதுரை - தோண்டி நெடுஞ்சாலையில் ஏராளமான பாலப்பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றில் எந்தவித எச்சரிக்கை பலகைகளும் அமைக்கப்படாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இதுபோன்ற பணிகள் நடைபெறும் பள்ளங்களுக்கு முன்பு எச்சரிக்கை அறிவிப்பு பலகைள் மற்றும் இரவு நேரத்தில் ஒளிரும் பலகைகளை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.