ஆர்.எஸ்.எஸ் இல்லாவிட்டால் இந்தியாவே செத்திருக்கும்.. அதை தடை செய்யச் சொல்வதா? - எச்.ராஜா ஆவேசம்!
சிவகங்கை : ஆர்.எஸ்.எஸ், பாஜக இல்லையென்றால் இந்தியாவே கொரோனாவால் செத்துப்போயிருக்கும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசியுள்ளார்.
பி.எஃப்.ஐ அமைப்பு தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டதால் மத்திய அரசு அதை தடை செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் என்ற தேசபக்தி இயக்கத்தை தடை செய்ய சொல்வதா என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழக அரசு தேசவிரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தடை விதிக்கப்பட்ட இயக்கத்திற்கு யாராவது துணை போனால் அதுவும் சட்டவிரோதம் தான் என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பி.எஃப்.ஐ. காரணம்காட்டி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பதா? தமிழக அரசுக்கு பாஜக கண்டனம்
எச்.ராஜா
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது 65வது பிறந்த நாளை தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கொண்டாடடினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எச்.ராஜா, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை என்பது நீதிமன்ற அவமதிப்பாகும். காவல்துறையிடம் கேட்டுத் தான் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. டிஜிபி நீதித்துறைக்கு தலை வணங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
துணை போவதும் சட்டவிரோதம்
மேலும் பேசிய எச்.ராஜா, "முதல்வர் ஸ்டாலின் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் தடை விதிப்பு குறித்து தெளிவாக கூறியுள்ளார். அதில் தடை விதிக்கப்பட்ட இயக்கத்திற்கு யாராவது துணை போனால் அதுவும் சட்டவிரோதம் தான் என்று தெரிவித்துள்ளார். பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்டது ஒரு நாளில் எடுக்கப்பட்ட முடிவு இல்லை. ராமலிங்கத்தை கொலை செய்தது போல பல பயங்கரத்தில் ஈடுபட்ட காரணத்தால் பிஎப்ஐ மற்றும் தொடர்புடைய அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.
தேசவிரோதிகள்
விசிக பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவுக்கு ஆதரவாக அழைப்பு விடுத்துள்ளது. பிஎஃப்ஐ மாநாட்டில் பேசும்போது பிஎஃப்ஐயா ஆர்.எஸ்.எஸ்ஸா என்ற யுத்தம் துவங்கியுள்ளது என்று பேசியுள்ளார். அதனால் தெள்ளத் தெளிவாக திருமாவளவன் தேசவிரோதி. காஷ்மீரில் 24 இந்துக்களை கொன்றேன் என்று அறிக்கை விட்ட யாசின் மாலிக் அழைத்து வந்து கூட்டம் போட்டு வன்முறைக்கு துணை போகிற கொலைகாரன் சீமான். தமிழக அரசு சீமானையும், திருமாவளவனையும் கைது செய்ய வேண்டும்.
கொம்பு சீவுகிறார்கள்
ஸ்டாலின் அப்பாவி. அவர் எனது நண்பர். அவருக்கு ஒருபுறம் சீமானும் மறுபுறம் திருமாவளவனும் கொம்பு சீவி விடுகிறார்கள். ஸ்டாலின் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சர்வதேச பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் யாரும் செயல்பட அனுமதிக்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை என்பது நீதிமன்ற அவமதிப்பாகும். காவல்துறையிடம் கேட்டு தான் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. டிஜிபி நீதித்துறைக்கு தலை வணங்க வேண்டும். நீதிமன்றத்திற்கும், ஆர்எஸ்எஸ்க்கும் எதிராக டிஜிபி செயல்படுகிறார்.
ஆர்.எஸ்.எஸ் இல்லையென்றால்
ஆர்.எஸ்.எஸ், பாஜக, பிரதமர் மோடி மட்டும் இல்லையென்றால் இந்தியாவே கொரோனாவால் செத்துப்போயிருக்கும். மொழி, மாநிலத்தின் பெயரால் வன்முறை வளர்க்க யார் முடிவு செய்தாலும் பாஜக அடக்கும். தேசவிரோத தீய சக்திகளை தமிழக காவல்துறை கைது செய்யவில்லை என்.ஐ.ஏ தான் கைது செய்துள்ளது. உளவுத்துறை அறிக்கையில் தமிழகத்தை பற்றியும் கூறியுள்ளது. தமிழக அரசு தேசவிரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.
பீகாரிலும்
பீகாரில் நிதிஷ்குமார் ஏன் பா.ஜ.கவை விட்டு வெளியே போனார்?
தமிழக அரசு போலவே பீகாரிலும் ஐ.எஸ் இயக்கத்தை அவர் தடுக்காமல் இருந்தார். என்.ஐ.ஏ களத்தில் இறங்கியது. எனவே, தனது வாக்கு வங்கி பாதிக்கப்படுகிறது எனக் கருதி நிதிஷ் குமார் வெளியேறினார். அவருக்கு அளித்த ஆதரவை பா.ஜ.கவினர் வாபஸ் வாங்கினார்களா? அவர் வெளியேறுவதற்கு இரண்டு நாள் முன் கூட முழுக்காலமும் அவர் தான் முதல்வராக இருப்பார் என பிரதமர் மோடி கூறினார்" எனத் தெரிவித்துள்ளார்.