”நீ இறங்கி ஆடு கபிலா.. இது நம்ம காலம்” பாகிஸ்தான் இடத்தை பிடித்த ஆஃப்கானிஸ்தான்.. பாவம் இங்கிலாந்து!
சென்னை: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி மிகப்பெரிய வரலாற்றை படைத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்களை குவித்தது. ஐசிசி தொடர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
ராவல்பிண்டி பிட்ச் என்பதால், இங்கிலாந்து அணி சேஸ் செய்துவிடும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் ஜோ ரூட் தவிர்த்து இங்கிலாந்து அணியால் எந்த பேட்ஸ்மேனும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஒரு கட்டத்தில் ஜோ ரூட் 111 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேற, இங்கிலாந்து அணியின் கனவும் முடிவுக்கு வந்தது. இறுதியாக 49.5 ஓவர்களில் 317 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாகியது.

இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இதன் காரணமாக பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை தொடர்ந்து இங்கிலாந்து அணியும் வெளியேறி இருக்கிறது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணி அடுத்த லீக் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றாலே, எளிதாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.
அடுத்த ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ளவுள்ளது. அந்த அணியின் பவுலர்கள் அனுபவமில்லாமல் இருப்பது ஆஃப்கானிஸ்தான் அணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியை ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியதன் மூலமாகவே டி20 உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு ஆஃப்கானிஸ்தான் அணி முன்னேறி சாதனை படைத்தது. அதேபோல் இம்முறையும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஏற்கனவே உலகக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி மிகச்சிறப்பாக விளையாடி வந்திருக்கிறது.
தற்போது மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஆஃப்கானிஸ்தான் அணி அசத்தியுள்ளது. இதனால் ஆசிய நாடுகளில் இந்தியாவுக்கு பின் மிகச்சிறந்த கிரிக்கெட் அணியாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இருந்தன. அதனை எளிதாக ஆஃப்கானிஸ்தான் அணி பிடித்துவிட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஏனென்றால் ஐசிசி தொடர்களில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணி இன்னும் இந்திய அணியை மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் வீழ்த்தவில்லை என்பதும் இதுவரை ஆச்சரியம்தான். ஆஃப்கானிஸ்தான் அணியுடன் தொடர்ச்சியாக இந்திய அணி கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் பட்சத்தில், அதுவும் விரைவில் நடக்க வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications