5 மாதங்களாக காத்துக் கொண்டிருந்தேன்.. சிஎஸ்கே அணியை சிக்கலில் மாட்டிவிட்ட சஞ்சு சாம்சன்!
மும்பை: சிஎஸ்கே அணியுடன் இணையும் நாளுக்காக 5 மாதங்களாக காத்துக் கொண்டிருந்ததாக நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக சிஎஸ்கே அணி தரப்பில் சஞ்சு சாம்சனிடம் அமெரிக்காவில் ஜூலை மாதம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது உண்மை என்றும் தெரிய வருகிறது.
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணியிடம் இருந்து டிரேட் முறையில் ரூ.18 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கி இருக்கிறது. இதன் மூலமாக தோனியின் இடத்தை நிரப்ப சஞ்சு சாம்சன் கொண்டு வரப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.

மேஜர் லீக் தொடரின் போதே அமெரிக்காவில் இருந்த சஞ்சு சாம்சனிடம் சிஎஸ்கே அணி பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின் ராஜஸ்தான் அணியில் இருந்து விலக முடிவு செய்த சஞ்சு சாம்சன், உடனடியாக அந்த அணி உரிமையாளர்களிடம் பேசி டிரேடில் செல்ல முடிவு செய்திருக்கிறார். மற்ற அணிகள் தரப்பில் சஞ்சு சாம்சனை வாங்க அணுகிய போதும், அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
ஏனென்றால் டிரேட் என்பது அணி நிர்வாகங்கள் மட்டுமல்லாமல், வீரர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும். இதனால் சஞ்சு சாம்சன் பிடிவாதமாக சிஎஸ்கே அணிக்கு செல்வேன் என்று வந்திருப்பது தெரிய வந்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் கொடுத்துள்ள முதல் நேர்காணலில், சிறுவயதில் இருந்த போதே சென்னைக்கு தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாட செல்வேன்.
மலையாளம் மற்றும் தமிழ் மொழிகள் இரண்டுக்கும் நல்ல தொடர்பு இருக்கிறது. கேரளாவில் தமிழ்ப் படங்களை அதிகமாக பார்ப்பார்கள். அதனால் கேரளா மக்களுக்கும் சிஎஸ்கே அணி மிகவும் நெருக்கமனது. கேரளாவில் அதிகமாக மஞ்சள் ஜெர்சியை மட்டுமே காண முடியும். 19 வயதிலே இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற போது, இந்திய அணிக்கு தோனிதான் கேப்டன்.
சிஎஸ்கே அணியில் தோனிக்கு கீழ் விளையாட வேண்டும் என்பது ஒரு கனவு. தலைவனுக்கு கீழ் விளையாட வேண்டும். ஐபிஎல், உள்ளூர் கிரிக்கெட் பற்றி மற்ற வீரர்கள் சொல்லும் போது ஒன்று மட்டுமே எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.. அது என்னவென்றால், சிஎஸ்கே அணியின் ஓய்வறையை போல் வேறு எந்த அணியிலும் அனுபவம் கிடைக்காது.
சிஎஸ்கே அணியைப் பற்றி எப்போதும் பெருமையான விஷயங்களை மட்டுமே கேட்டிருக்கிறேன். சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடும் போது, ஒவ்வொரு முறையும் எவ்வளவு பெரிய அணி என்பதை உணர்ந்திருக்கிறேன். கடந்த சில நாட்களாக எங்கு சென்றாலும் சிஎஸ்கே அணியில் இணைகிறீர்களா என்று பலரும் கேட்டார்கள். ரசிகர்களின் ஆர்வத்தை விடவும், கடந்த 5 மாதங்களாக அதிக ஆர்வத்துடன் இதே நாளுக்காக நான் காத்திருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications