யாழ். பொது நூலகத்தில் அப்துல் கலாம் சிலை திறப்பு!
யாழ்ப்பாணம்: இந்தியாவின் 'மக்களின் ஜனாதிபதியாக' திகழ்ந்த மறைந்த அப்ல்து கலாமின் சிலை இலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரியில் யாழ்ப்பாணத்துக்கு அப்துல் கலாம் வருகை தந்தார். அப்பயணத்தின் போது யாழ். பல்கலைக் கழகம் மற்றும் யாழ். பொதுநூலகங்களில் கலாம் உரையாற்றினார்.
பின்னர் 2015-ம் ஆண்டு அரசுமுறை பயணமாக இலங்கைக்கு சென்றார் அப்துல்கலாம். இதுதான் அவர் மேற்கொண்ட கடைசி வெளிநாட்டுப் பயணமாகும். அதன் பின்னர் ஜூலை மாதம் அப்துல்கலாம் காலமானார்.
இந்நிலையில் இந்தியா-இலங்கை இடையே நட்புறவை வளர்க்க யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் அப்துல் கலாமின் மார்பளவு சிலை இன்று இந்திய தூதரகம் சார்பில் திறக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய தூதர் சின்ஹா, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து இந்த சிலையைத் திறந்து வைத்தனர். இந்தியாவுக்கு வெளியே அப்துல் கலாமுக்கு தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில்தான் முதன் முறையாக சிலை திறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாளை திறந்து வைக்கிறார். இந்த விளையாட்டரங்கை இந்தியாதான் சீரமைத்துக் கொடுத்தது. இத்திறப்பு விழாவில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவும் பங்கேற்க உள்ளார். சர்வதேச யோகா தினமான ஜனவரி 21-ந் தேதியை முன்னிட்டு இந்த விளையாட்டரங்கம் திறக்கப்படுகிறது.