ஐயா.. காப்பாற்றுங்கள்... இலங்கை ஆட்சி மாற்றத்தால் அலறும் கருணா! சரத்பொன்சேகாவிடம் தஞ்சம்
கொழும்பு: மகிந்த ராஜபக்சேவின் தேர்தல் தோல்வியால், அவருக்கு நெருக்கமாக இருந்த பலரும் நடுத்தெருவிற்கு வந்துள்ளனர். பத்மநாபன், கருணா போன்ற முன்னாள் விடுதலை புலிகள், செய்வதறியாது திகைத்துவருகின்றனர்.அதில் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு துரோகம் செய்துவிட்டு அரசுடன் கைகோர்த்த கருணா, தனது உயிரை காப்பாற்றுமாறு சரத்பொன்சேகாவிடம் கெஞ்சிவருவதாக இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி போரில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததாக குற்றச்சாட்டு உள்ளாகினார் அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே. இந்நிலையில், கடந்த வாரம் நடந்த பொதுத்தேர்தலில் ராஜபக்சே பரிதாபமாக தோற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்று அதிபரானார்.
கருணாவுக்கு கலக்கம்
இந்த அரசியல்மாற்றம், சட்ட விரோத வழிகளில் ராஜபக்சேவுக்கு கைக்கூலிகளாக செயல்பட்டவர்களுக்கு வயிற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான தண்டனைக்கு தாங்கள் உள்ளாக வேண்டும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அதில் ஒருவர்தான் கருணா.
புலிகளுக்கு துரோகம் செய்த கருணா
விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து முக்கியமான தருணத்தில், வெளியேறிய கருணா, ராஜபக்சேவின் கையாளாக மாறினார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை ராஜபக்சே ஆக்ரோஷமாக முன்னெடுக்க, கருணா கொடுத்த பல ரகசிய தகவல்களும் காரணம். விடுதலை புலிகளுக்கு எதிரான தாக்குதலின்போது இலங்கை ராணுவ தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவுக்கு, கருணா பல்வேறு வகையில் உதவிவந்தார்.
தளபதியின் கையாள் கருணா
புலிகள் வெற்றிகரமாக நடத்திய தாக்குதல்கள் எவ்வாறு நடத்தப்பட்டன, புலிகள் கையாளும் யுக்திகள் எப்படிப்பட்டது என்பது போன்ற ரகசிய தகவல்களை கருணா, சரத்பொன்சேகாவிடம் கூறியுள்ளார். இந்நிலையில்தான் கடந்த தேர்தலின்போது, மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான சரத்பொன்சேகா போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் தோற்றதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
உயிர் முக்கியம் அமைச்சரே..
இதனால், அதிகாரமில்லாத சரத்பொன்சேகா நமக்கு எதற்கு என்றரீதியில், கருணா கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இந்நிலையில், சிறிசேன வெற்றி பெற்ற நிலையில், சரத்பொன்சேகாவும், சிறிசேனவும் நெருக்கமாக இருப்பதை அறிந்த கருணா, தனது உயிரை காப்பாற்ற சரத்பொன்சேகாவிடம் தஞ்சமடைந்துள்ளார்.
என்ன செய்யப்போகிறார் புதிய அதிபர்?
தனக்கு எதுவுமே வேண்டாம், உயிரை காப்பாற்றிக் கொடுத்தால் போதும் என்று சரத்பொன்சேகாவிடம், கெஞ்சிக்கொண்டிருக்கிறார் கருணா என்று இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது இனத்திற்கு துரோகம் செய்த கருணாவை, சிறிசேன நம்பப்போகிறாரா, அல்லது திட்டமிட்டபடி ஒருவழி செய்யப்போகிறாரா என்பதை வடக்கு மாகாண தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.