இலங்கையிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம்: ராஜபக்ஷேவிடம் சொன்ன இந்திய பாதுகாப்பு செயலர்
கொழும்பு: இலங்கையிடமிருந்து ஏராளமாக கற்றுக்கொள்ள முடியும் என்று இந்திய பாதுகாப்பு செயலாளர் மதுர் தன்னிடம் தெரிவித்ததாக அந்த நாட்டு அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். இலங்கையின் கண்டியிலுள்ள ஜனாதிபதியின் மாளிகையில் ராஜபக்ஷேவை மதுர் இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து இலங்கை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இரண்டு தெற்காசிய அண்டை நாடுகளும் பகிர்ந்து வரும் பலமான நட்பில் இலங்கை-இந்தியாவிற்கிடையிலான பாதுகாப்புத்துறைக்கான கூட்டுறவு ஒரு முக்கியமான அம்சம் என்பதை ராஜபக்ஷே தொடர்ச்சியாக பேணி வந்துள்ளார். இந்தச் சந்திப்பில் கவனஞ்செலுத்தப்பட்ட பல்வகைகப்பட்ட விடயங்களில், இரு நாடுகளின் பல்வேறு ராணுவப் பிரிவுகளுக்கிறடயிலான பயிற்சிகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இந்திய பாதுகாப்புச் செயலாளரும் கலந்துரையாடினர்.
இந்தியாவில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி அனுபவங்கள் சிறப்பான முறையில் அமைந்திருந்தாக ஜனாதிபதியிடம் மதுர் தெரிவித்தார். "இலங்கையிடமிருந்து நாங்கள் ஏராளமான பல விடயங்களை கற்றுக் கொள்ள விரும்புகிறோம்" என மதுர் தெரிவித்தார்.
தற்போது காணப்பட்டுத் தொடர்ந்து கொண்டிருக்கும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மேலதிகமாக, இரு நாடுகளிலுமுள்ள பாதுகாப்பு பயிற்சி நிறுவனங்களில் வருகை விரிவுரையாளர்களையும், நீண்டகால பயிற்சியாளர்களையும் பரிமாறிக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை இலங்கையும், இந்தியாவும் ஆராயுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் ஆழ்கடல் மீன்பிடி காரணமாக இலங்கை மீனவர்கள் குறிப்பாக வடக்கு மீனவர்கள், எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷே குறிப்பிட்டார். அடிக்கடல் மீன்பிடி நடைமுறை தொடருமானால் இலங்கை, இந்தியா இரண்டிலுமிருந்து மீன் வளங்கள் முழுமையாக அழிந்துபோகும் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷ, இலங்கையின் வடக்குப் பகுதியிலுள்ள தமிழ் மீனவர்கள் இதன்காரணமாக அதிகம் பாதிக்கப்படுவர் எனச் சுட்டிக்காட்டினார்.
அதிகாரிகள், பாதிக்கப்பட்ட தரப்புக்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் தீர்சவான்றைக் கொண்டுவர உதவும் என இரண்டு தரப்பினரும் நம்பிக்கை வெளியிட்டனர். இலங்கையில் நேற்று நடைபெற்ற 2வது வருடாந்திர பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் பங்குபெற மதுர் அங்கு சென்றிருந்தார். இலங்கைக்கான இந்திய தூதர் வை.கே.சின்ஹா, பாதுகாப்பு அமைச்சக இணைச் செயலாளர் ராம் சுகஹ் சிங், வெளிவிவகார அமைச்சரின் இணைச்செயலாளர் சுச்சித்திரா துரை ஆகியோரும் மதுருடன் இலங்கை சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.