புலிகள் இயக்க முக்கிய பொறுப்பாளர் நந்தகோபன் மலேசியாவில் கைது! இலங்கைக்கு நாடு கடத்தல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அனைத்துலக தொடர்டபகத்தின் பொறுப்பாளர் காஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் மணிவண்ணனின் வலது கரமாக இருந்தவர் நந்தகோபன். இவரது கட்டுப்பாட்டில்தான் புலிகளின் வெளிநாட்டு நிர்வாக அமைப்புகள் இருந்தன.
புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு ஊடகங்கள் இவரது நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தன. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது காயமடைந்த நந்தகோபன் பின்னர் இலங்கையில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றார்.
அங்கிருந்தபடியே விடுதலைப் புலிகளின் நெடியவன் குழுவில் மூத்த தலைவராக செயல்பட்டு வந்தார். ஆனால் அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்ற தகவல் கிடைக்காத நிலையில் இலங்கை அரசு மிகத் தீவிரமாக தேடிக் கொண்டிருந்தது.
அப்போதுதான் இலங்கை அரசுக்கு மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலமாக ஈரான் வழியே லண்டனுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. உடனே ஈரான் அரசை இலங்கை உஷார்படுத்தியது.
ஈரானின் டெஹ்ரான் விமான நிலையத்தில் நந்தகோபனை அந்நாட்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். போலிபாஸ்போர்ட்டில் பயணிப்பதால் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்க முடியாது என்று கூறி அங்கிருந்து மலேசியாவுக்கு நந்தகோபன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே மலேசிய அதிகாரிகள் நந்தகோபனை கைது செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து மலேசியா சென்ற இலங்கை புலனாய்வுத்துறையினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த மார்ச் 6-ந் தேதியன்று நந்தகோபனை மலேசியாவில் இருந்து கொழும்புவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு என்று கொழும்பு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
நந்தகோபனின் கைது வெளிநாடு வாழ் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுக்கு பெரும் பின்னடைவாகவும் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications