ராணுவத்தின் உதவியுடன் ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கவில்லை: மகிந்த ராஜபக்சே அந்தர்பல்டி!
கொழும்பு: ராணுவத்தின் உதவியுடன் தாம் ஆட்சியைத் தக்க வைக்க முயற்சிக்கவே இல்லை என்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் தோல்வி என்று தெரிந்த போது சட்டவிரோதமாக ராணுவத்தின் உதவியுடன் ஆட்சியைத் தக்க வைக்க மகிந்த ராஜபக்சேவும் அவரது குடும்பத்தினரும் முயற்சித்துள்ளனர்.
ஆனால் இதற்கு அட்டர்னி ஜெனரலும் தேர்தல் ஆணையாளரும் ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி ஆட்சியை வென்ற மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்தனர். இந்த சதித் திட்டம் குறித்து விசாரணை நடத்த தற்போதைய புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
1/3: I deny in all possible terms reports of attempts to use the military to influence election results. –MR
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) January 13, 2015
இந்த நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில், தேர்தல் முடிவுகளின் போது ராணுவத்தை பயன்படுத்த முயற்சித்தேன் என்பதை மறுக்கிறேன். தேர்தல் முடிவுகள் வெளியான போது அதை ஏற்று புதிய அதிபரை வாழ்த்தினேன். பல ஆண்டுகாலமாக அரசியல் இருந்து வரும் நான் மக்கள் தீர்ப்புக்கு கட்டுப்படுகிறேன். அரசியல் வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜமானதுதான் என்று ராஜபக்சே இன்று பதிவிட்டுள்ளார்.
தம் மீது நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்துவிடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே மகிந்த ராஜபக்சே இப்படி ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.