ராணுவத்தின் ஆதரவுடன் ஆட்சியில் தொடர முயற்சித்த "ராஜபக்சே கோஷ்டி"- திடுக் தகவல்!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையிலும் ராணுவத்தின் உதவியுடன் ஆட்சியில் நீடிக்க ராஜபக்சே குடும்பத்தினர் கடைசிநேரத்தில் படுதீவிர முயற்சித்ததாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அதுரலிய ரத்ன தேரர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரிபால் சிறிசேன வென்று பதவியேற்றார். புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினிக்கு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் அதுரலிய ரத்ன தேரர் அளித்த பேட்டி ஒன்றில், இலங்கை தேர்தல் ஆணையாளருக்கு ராஜபக்சே குடும்பத்தினரிடம் இருந்து கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.
இந்த நெருக்கடியைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சுதந்திரமாக, நேர்மையான முறையில் தேர்தலை நடத்தியதற்காக தேர்தல் ஆணையாளரைப் பாராட்ட வேண்டும், ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க ராஜபக்சே குடும்பத்தினர் என்னவெல்லாம் நெருக்கடி கொடுத்தார்கள் என்பதை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய பகிரங்கப்படுத்த வேண்டும்.
ராணுவத்தின் உதவியுடன் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க ராஜபக்சே குடும்பம் முயற்சித்தது என்று கூறியிருக்கிறார்.
மேலும் மகிந்த ராஜபக்சே தோல்வியை ஏற்றுக் கொண்ட போதும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவினால் இதை தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்துபோனவராக இருந்ததாகவும் ஜாதிக ஹெல உறுமயவினர் கூறுகின்றனர்.
கோத்தபாய ராஜபக்சேதான், ஆட்சியில் மகிந்த ராஜபக்சே தொடர்ந்து நீடிப்பதற்கு பல வழிகளையும் கையாண்டதாகவும் கூறுகின்றனர். இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தின் மூலம் ஆட்சியில் நீடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அட்டர்னி ஜெனரல் இதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல்தான் தேர்தல் ஆணையாளரின் அலுவலகத்துக்கே கோத்தபாய சென்று தேர்தல் முடிவுகளை நிறுத்த முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் ராஜபக்சே குடும்பத்தினரின் நெருக்கடிகளுக்கு எவரும் உடன்படாத காரணத்தால் வேறுவழியின்றி அமைதியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.