புதிய கட்சி... சுதந்திர கட்சியில் இருந்து ராஜபக்சே உட்பட 30 எம்பிக்கள் விரைவில் டிஸ்மிஸ்
கொழும்பு: புதிய அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே உட்பட 30 எம்.பிக்களை டிஸ்மிஸ் செய்ய அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முடிவு செய்துள்ளது.
இலங்கை அதிபராக இருந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தம் கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தார் மகிந்த ராஜபக்சே. ஆனால் அதிபர் தேர்தலின் போது அவரது சொந்த கட்சியின் பொதுச்செயலராக இருந்த மைத்ரிபால சிறிசேனவே அவருக்கு எதிராக களமிறங்கி வென்றார்.
இதனைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சேவின் பிடியில் இருந்து சுதந்திர கட்சி நழுவியது. பெரும்பாலான நிர்வாகிகள் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தேசிய அரசு
பின்னர் நாடாளுமன்ற தேர்தலின் போது ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. இருப்பினும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி- சுதந்திர கட்சி இணைந்து தேசிய அரசை அமைத்தது. இந்த அரசில் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் இணையவில்லை. அவர்கள் தனி ஆவர்த்தனம் செய்து வந்தனர்.
பிளவுபடும் சுதந்திர கட்சி
இதனிடையே சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறி தனி கட்சி தொடங்க மகிந்த ராஜபக்சேவும் அவரது ஆதரவாளர்களும் அண்மையில் முடிவு செய்தனர். இதனால் ஆளும் சுதந்திர கட்சி இரண்டாக பிளவுபடும் நிலை உருவாகி உள்ளது.
ராஜபக்சே டிஸ்மிஸ்?
இதனைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சே, அவரது ஆதரவு எம்.பி.க்கள் 30 பேரும் விரைவில் சுதந்திர கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படும் நிலை உருவாகி உள்ளது. அதே நேரத்தில் இரு அணிகளையும் ஒன்று சேர்க்கும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.
சாதிக்குமா?
இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திர கட்சி ஆகிய 2 சிங்கள கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும் வலிமை பெற்றவையாக இருந்து வருகின்றன. 3-வது பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து வருகிறது. தற்போது ராஜபக்சே அணி உருவாக்கும் புதிய கட்சி, ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் கட்சியாக இருக்குமா? அல்லது பத்தோடு பதினொன்றாக இருக்குமா? என்பது போகப் போக தெரிந்துவிடும்.