பசிலுக்கு ஜாமீன்! அரசியலுக்கு சமல் முழுக்கு! அரசியலுக்கே வரமாட்டேன் - கோத்தபாய!!
கொழும்பு: நிதி மோசடியில் சிக்கி ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சேவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் மகிந்தவின் சகோதரர் சமல் ராஜபக்சே அரசியலுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளார். மற்றொரு சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவோ அரசியலுக்கே வரமாட்டேன் எனக் கூறியுள்ளார்.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே தோல்வியைத் தழுவினார்.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான ஊழல் முறைகேடு புகார்கள் அணிவகுத்தன. இதில் ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே சிக்கி சிறைக்குப் போனார். இதேபோல் மற்றொரு சகோதரர் கோத்தபாய மீது சட்டவிரோத ஆயுத விற்பனை புகார் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது பசில் ராஜபக்சேவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இருக்கும் கோத்தபாய ராஜபக்சேவோ, நான் அரசியலுக்கே வரப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் மகிந்தவின் மற்றொரு சகோதரர் சமல் ராஜபக்சே, அரசியலுக்கே முழுக்கு போட்டுவிட்டு ஓடப்போவதாக கூறியுள்ளார். இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.