ராஜபக்சேவுக்கு எதிராக 33 அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஒன்றிணைந்து பொதுசெயல் திட்டம் உருவாக்கம்!!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவை எதிர்க்கும் 33 கட்சிகள், அமைப்புகள் ஒன்றாக இணைந்து பொதுசெயல் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளன.
இலங்கையில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 8-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 3வது முறையாக மீண்டும் ராஜபக்சே போட்டியிடுகிறார்.

ராஜபக்சேவை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பாக அவரது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த தலைவர் மைத்ரிபால சிறிசேன நிறுத்தப்பட்டுள்ளார். மைத்ரிபாலவை களமிறக்கியதில் முன்னாள் அதிபர் சந்திரிகா முக்கியப் பங்கு வகித்தார்.
இந்த நிலையில் ராஜபக்சேவை எதிர்க்கும் 33 அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஒன்றிணைந்து பொதுசெயல் திட்டம் ஒன்றை வகுத்து அதில் கையெழுத்திட்டுள்ளன. கொழும்பு விகாரமஹாதேவி திறந்த வெளியரங்கில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் 33 அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொதுசெயல் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதிபர் தேர்தலின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க, எம்.கே.டி.எஸ். குணவர்த்தன, நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட பலரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த பொதுசெயல் திட்டத்தில், இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறையை 100 நாட்களில் ஒழிப்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications