பெண்களும் 'சரக்கு' வாங்கலாம், விற்கலாம்... 38 ஆண்டு தடையை நீக்கியது இலங்கை!
இலங்கையில் பெண்களும் மதுபாகனங்களை வாங்கலாம், விற்கலாம் என்று அந்த நாட்டு அரசு தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு : பெண்கள் மதுபானங்களை வாங்கவும் விற்கவும் 38 ஆண்டுகளாக இருந்த தடையை நீக்கி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடந்த 1979ம் வருட தொடக்கத்தில் திறந்தவெளி சந்தை பொருளாதார நிலையை தனது நாட்டில் கொண்டு வந்தது. அதில் இருந்து பெண்கள் மதுபானம் வாங்குவதற்கும் மற்றும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை நடைமுறையில் இருந்த போதும் பல தொழில் நிறுவனங்கள் பெண்களை மதுபானம் பரிமாறும் பணியில் அமர்த்தியதோடு, மதுபான விற்பனையிலும் ஈடுபடுத்தியது.

தடை நீக்கியது நிதியமைச்சகம்
இந்நிலையில் இலங்கை நிதி அமைச்சர் மங்கல சமரவீரா பாலின சமன்பாட்டை ஏற்படுத்தும் விதமாகவும், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும் தடையை நீக்கி கையெழுத்திட்டுள்ளார். அந்த நாட்டு நிதித்துறை அமைச்சகம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.

கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு
இதே போன்று இலங்கையில் இரவு 10 மணிவரை மதுபான கடைகள் திறந்து வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தினை விட கூடுதலாக ஒரு மணிநேரம் மதுபான கடை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பணியாற்ற அனுமதி வாங்கத் தேவையில்லை
இலங்கை அரசின் தடை நீக்கப்பத்தால் இனி மதுபானக் கடைகளில் பணியாற்ற பெண்கள் மாநில மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. 38 ஆண்டுகால தடை நீக்கப்பட்டதற்கு சிலர் வரவேற்பு தெரிவித்தாலும், இதனால் பல பெண்கள் மதுவிற்கு அடிமையாகும்நிலை ஏற்படும் என்றும் சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.

மதுபழக்கம் அதிகரிக்கும் அபாயம்
மதுபானம் எடுத்துக் கொள்வது இலங்கை கலாச்சாரத்திற்கு எதிரானது என்று சில பெண்கள் பாரம்பரியமாக கடைபிடித்து வருவதால், பெண்கள் மது அருந்தும் வழக்கம் இல்லை. எனினும் கடந்த 2016ம் ஆண்டு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா மதுபானத்திற்கு எதிராக மேற்கொண்ட பிரச்சாரத்தில் அண்மைக் காலமாக பெண்கள் மதுபானம் அருந்துவது அதிகரித்துள்ளதாக கூறி இருந்தார்.












Click it and Unblock the Notifications