இந்தியாவுக்குள் 5 கி.மீ ஊடுருவி தமிழக மீனவர்களை கைது செய்த சிங்கள கடற்படை-இலங்கை அதிகாரிகள் ஒப்புதல்
யாழ்ப்பாணம்: இந்திய கடல் எல்லைக்குள் 5 கி.மீ. அத்துமீறி ஊடுருவியே தமிழக மீனவர்கள் 43 பேரை அண்மையில் இலங்கை கடற்படை செய்ததை இலங்கை கடற்றொழில் அமைச்சக அதிகாரிகள் ஒப்புக் கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் நாளேடு எழுதியிருப்பதாவது: இலங்கைக் கரை கண்ணுக்குத் தெரியும் தூரம் வரை தமிழக மீனவர்கள் கூட்டமாக முன்னேறி வருவது உண்டு. அப்போதெல்லாம், ஒவ்வொரு முறையும், அவர்களை விரட்டிச் சென்று கலைத்து அனுப்பும் வேலையை இலங்கைக் கடற்படை செய்வது கிடையாது. சில சமயம் நடக்கும். சில சமயம் உதாசீனமாகச் செயற்படுவர்.
மும்பையில் கடற்படை கப்பலில் திடீர் வெடி விபத்து.. 3 வீரர்கள் பரிதாப பலி
சுற்றி வளைத்து 43 மீனவர்கள் கைது
ஆனால், அப்படி அத்துமீறுவோரை இன்று பிடித்து வாருங்கள் என்று மேலிடத்து உத்தரவு வரும் போல. அன்றைய தினம், "டபிள் இன்ஜின்' பூட்டி வேலை செய்வர் கடற்படையினர் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்காக, எல்லை மீறாத தமிழக மீனவர்களையும் அள்ளி வருவதா? கடந்த டிசெம்பர் 19ஆம் திகதி திடீரென இப்படி மீனவர் சுற்றி வளைப்பு ஒரே தினத்தில் நடந்தது. மன்னாரில் 2 படகுகளில் வந்த பன்னிரு மீனவர்கள் சிக்கினர். ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு உட்பட்ட கடல் பிரதேசத்தில் 6 படகுகளில் வந்த 43 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். சிக்கிய மீனவர்கள் எல்லோரும் தாங்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறவேயில்லை என்று ஒரேயடியாகச் சாதித்தனர்.
நீதிமன்றம் கேள்வி
எனினும், அப்படி வாதிட்டு, சட்ட வியாக்கியானம் பண்ணி, பிரயோசனமில்லை, குற்றத்தை ஒப்புக் கொண்டு, ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஏற்றுக் கொண்டால், விரைந்து வீடு திரும்பலாம் என்ற கருத்தில் - வேறு வழியின்றி - அவர்களும் வழமை போல குற்றத்தை ஒப்புக் கொண்டனர். மன்னார் நீதிமன்றம் பன்னிரு மீனவர்களுக்கும் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடச் சிறைத் தண்டனையுடன் விடுதலைத் தீர்ப்பு வழங்கியது. அவர்களில் மூன்று பேருக்குக் கொரோனாத் தொற்று இருப்பதால் அவர்கள் மூவரும் இங்கு சிறையில் இருக்க, எஞ்சியோர் நாடு திரும்பினர். இதேவேளை, ஊர்காவற்றுறை நீதிமன்ற நியாயாதிக்கத்துக்குள் வந்த 43 தமிழக மீனவர் விடயத்தில், அவர்கள் கைது செய்யப்பட்ட கடல் பிரதேசத்தை சட்ட ரீதியாக ஆவணமாகக் குறித்து, வரைபட விவரமாகத் தரும்படி நீதிமன்றம் பணித்துள்ளது.
மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு
இந்தச் சூழ்நிலையில், மன்னார் நீதிமன்றுக்கு உட்பட்ட வழக்கில், பன்னிருதமிழக, மீனவர்களும் கைது செய்யப்பட்ட சமயம், பிடிக்கப்பட்ட இரண்டு படகுகள் தொடர்பான வழக்கு இரண்டொரு தினங்களில் நீதிமன்றுக்கு வர விருக்கின்றது. மீனவர்கள் கைது செய்யப்பட்ட இடம், அவர்களின் படகுகள் வழி மறிக்கப்பட்ட இடங்கள் பற்றிய வரைபட விவரத்தை மன்னார் நீதிமன்றமும் கேட்கலாம் என்ற எண்ணத்தில் அதற்கு ஆயத்தமானார்கள் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள்.
இந்தியாவுக்குள் ஊடுருவல் அம்பலம்
மேற்படி இரு படகுகளின் ஜீ.பி.எஸ். கருவிகளை கடற்படையிடம் பெற்று,அவற்றில் ஒன்றை ஆராய முற்பட்டார்கள் அதிகாரிகள். அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்ததாக நம்பகரமாகத் தெரியவந்தது. அந்த மீனவர்கள் கைது செய்யப்பட்ட சமயம் அவர்களின் படகுகள் மன்னார் பேசாலைக் கரையிலிருந்து சுமார் 25 கடல் மைல் தூரத்தில் இருந்ததாம். இருபது கடல் மைல் தூரம் வரைதான் இலங்கைக் கடல் எல்லை. ஆக, நான்கு, ஐந்து கிலோ மீற்றர் தூரம் மேலதிகமாகப் பயணித்துச் சென்று இந்தப் படகுகளில் ஒன்றை அள்ளி வந்திருக்கின்றனர் என்ற சந்தேகம் அமைச்சு அதிகாரிகளுக்கு வந்ததால் மேற்படி ஜி.பி.எஸ். கருவிகளைப்பரிசீலிக்கும் நடவடிக்கையை கைவிட்டு அவர்கள் அந்த முயற்சியிலிருந்து ஜாகாவாங்கினர் எனவும் அறிய வந்தது. "நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரமல்ல, நிலை நாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்.' - இது நீதித்துறை முது மொழி. தமிழக மீனவர்கள் விடயத்தில் வடக்கு நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு இது சமர்ப்பணம். இவ்வாறு காலைக்கதிர் நாளிதழில் எழுதப்பட்டுள்ளது. அதாவது இந்திய கடல் எல்லைக்குள் 5 கி.மீ. அத்துமீறி ஊடுருவியே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அட்டூழியமாக கைது செய்திருப்பதையே இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.