இலங்கை அதிபர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! விரைவில் முடிவுகள் வெளியாகும்!!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது
இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவும் அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மைத்ரிபால ஸ்ரீசேனவும் களத்தில் உள்ளனர்.
இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 60%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தன. சிங்களர் வாழும் பகுதிகளில் 70%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தன.
மொத்தம் 72% வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்றைய அதிபர் தேர்தலில் பெரும் வன்முறை வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் வன்முறை சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே வன்முறை வெடித்தது.
வாக்குப் பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் இரவு 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இரவு 10.30 மணியளவில் தபால் வாக்குகளில் மைத்ரிபால ஸ்ரீசேன 20 மாவட்டங்களில் முன்னிலை வகித்து வருவதாகவும் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே பெரும் பின்னடைவை சந்தித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இலங்கையில் வாக்குச் சீட்டு முறைதான் அமலில் இருப்பதால் விரைவில் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.