இரவில் மின்வெட்டு.. படிக்கப்போன மாணவி மீது மெழுகுவர்த்தி விழுந்து.. விபரீதத்திற்கு காரணமான ஸ்கர்ட்!
கொல்லம்: இந்தியாவில் கடுமையான நிலக்கரி பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல மாநிலங்கள் மின்வெட்டால் தவித்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் சில நாட்களுக்கு முன்பு கடுமையான மின்வெட்டு இருந்துவந்த நிலையில், தற்போது நிலைமை ஓரளவுக்குச் சீரடைந்துள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதால், மாணவர்கள், பொதுமக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில்தான், மின்வெட்டு ஏற்பட்டதால் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து படிக்கச் சென்ற மாணவி தீப்பற்றி பலியாகியுள்ளார்.

கேரளா மாநிலம், கொல்லம் அருகே உள்ள குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அணில்-லீனா தம்பதி. அணில் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், லீனா ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் மியா (17), அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
நேற்று லீனாவுக்கு இரவுப் பணி என்பதால் வேலைக்குச் சென்றுவிட்டார். மகள் மியா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இரவு 8 மணியளவில் அந்தப் பகுதி முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் படிப்பதற்காக மியா அங்கிருந்த மெழுகுவர்த்தியை ஏற்றியுள்ளார்.
அப்போது கையிலிருந்து தவறி விழுந்த மெழுகுவர்த்தி மியாவின் உடல் மீது விழுந்தது. முன்னதாக, மியா தான் அணிந்திருந்த ஆடையை பெயிண்ட் உடன் கலக்கும் தின்னரை துடைக்கப் பயன்படுத்தியுள்ளார். 'தின்னர்' விரைவில் தீப்பற்றும் தன்மை கொண்டது. இதனால் அதில் தீ பட்டதும் மளமளவென்று பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
தீப்பற்றியதால் வலியில் கத்திய மியாவை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு அருகேயுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், படிப்பதற்காக மெழுகுவர்த்தி ஏற்றிய பள்ளி மாணவி தீப்பற்றி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications