ஆஸ்திரேலியாவை மிரட்டிய பேய் மழை.. 3 பேர் பலி
Recommended Video
சிட்னி : ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மத்திய கடலோரப் பகுதிகளில் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்ததால், வெள்ளக்காடாகி விட்டது.
வரலாறு காணாத மழையால், மிகப்பெரிய நகரமான சிட்னியில் இயல்பு வாழ்க்கை முடங்கி போய் உள்ளது. சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக நவம்பர் மாதத்தில் 84 மி.மீ அளவு மழை சராசரியாக பெய்யும். ஆனால், இன்று ஒரே நாளில் மட்டும் 125 மி.மீ. மழை பதிவாகியுள்ளது, என அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விமான சேவை பாதிப்பு
விமானநிலையத்தை சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ஒரே ஒரு ரன்வேயில் மட்டும் விமானங்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விமானங்கள் தாமதமாகவும், விமான சேவை அவ்வப்போது ரத்தும் செய்யப்பட்டு வருவதாக சிட்னி விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|
போக்குவரத்து சேவை இல்லை
ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இருப்பினும் ரயில் சேவை நிறுத்தி வைக்கபட்டதால் பயணிகள் எங்கு செல்வது என்று தெரியாமல் ரயில் நிலையத்திலேயே தவித்தனர். சாலை போக்குவரத்தும் முடங்கியது.
மழை தொடரும்
அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். மேலும், குளிரும் வாட்டி வருவதால் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
|
3 பேர் பலி
34 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த மழைக்கு இதுவரை மூன்று பேர் உயிரிழந்தனர். அடாத மழையால் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்பட்டன. மரங்கள் வேரோடு ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றன. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தெருக்களில் தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்ற ராட்சச மோட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.