ஆஸ்திரேலிய பெண்ணை கொன்று குயின்ஸ்லேண்ட் கடற்கரையில் புதைத்த ராஜ்வீந்தர்.. காரணம் தெரியுமா? கொடுமை!
சிட்னி: இந்தியர் ஒருவர், ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து அந்த நாட்டு கடற்கரையில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டு 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை, தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். பெரிதாக எந்த வம்பு தும்புக்கும் செல்லாத அவர், எதற்காக அந்தப் பெண்ணை கொலை செய்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஒரு நொடியில் உருவாகும் கோபம், தன்னையும் தன்னை சுற்றியிருப்பவர்களையும் அழித்துவிடும் என்பதற்கு இந்தச் சம்பவமே சிறந்த உதாரணமாக இருக்கிறது.

அமைதியானவர், ஆனால்..
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்வீந்தர் சிங் (38). மின் பொறியாளரான இவர், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் நகரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பொதுவாக, அமைதியான சுபாவம் கொண்டவரான யார் வம்பு தும்புக்கும் போகிற ஆள் கிடையாது எனக் கூறப்படுகிறது. ஆனால், இவருக்கு கோபம் வந்துவிட்டால் அது மிக மோசமாக இருக்கும் என அவருடன் வேலை பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

நாய் குரைத்ததால் வந்த வினை
இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி அதிகாலை தனது வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்கள், பழங்கள், காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தி உள்ளிட்டவற்றை ராஜ்வீந்தர் சிங் வாங்கி வந்துள்ளார். குயின்ஸ்லேண்ட் பீச் அருகே அவர் வந்த போது, டோயா கார்டிங்லி (24) என்ற இளம்பெண் தனது நாயை கூட்டிக்கொண்டு வாக்கிங் சென்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த ராஜ்வீந்தர் சிங்கை பார்த்து அந்த நாய் பயங்கரமாக குரைத்துள்ளது. மேலும், அவரை கடிக்கவும் பாய்ந்துள்ளது.

கொன்று புதைத்த ராஜ்வீந்தர் சிங்
ஆனால், டோயோ கார்டிங்கிலி தனது நாயை சத்தம் போடாமல் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த ராஜ்வீந்தர் சிங், "கொஞ்சம் நாயை பிடியுங்கள்.. அலட்சியமாக இருக்காதீர்கள்" எனக் கூறியுள்ளார். இதற்கு பதிலுக்கு அந்தப் பெண்ணும் ராஜ்வீந்தர் சிங்கை திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜ்வீந்தர் சிங், தான் வாங்கிக் கொண்டு வந்த கத்தியால் டோயாவை கண்மூடித்தனமாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே டோயோ துடிதுடித்து இறந்துவிட, பயந்துபோன ராஜ்வீந்தர் சிங் அவரது உடலை கடற்கரை மணிலேயே புதைத்துள்ளார். அதிகாலை நேரம் என்பதால் இதை யாரும் பார்க்கவில்லை.

தலைமறைவு - கைது நடவடிக்கை
பின்னர் வீட்டுக்கு வந்த ராஜ்வீந்தர் சிங் தனது மனைவி, நண்பர்களிடம் எதுவும் சொல்லாமல் இந்தியாவுக்கு வந்து தலைமறைவானார். இதனிடையே, சிசிடிவி கேமராவை பார்த்து, டோயாவை கொலை செய்தது ராஜ்வீந்தர் சிங் தான் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அவர் குறித்து துப்பு தருபவர்களுக்கு 1 மில்லியன் டாலர் கொடுக்கப்படும் எனவும் ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்தது. ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அவர் இந்தியா தப்பியதை அறிந்த ஆஸ்திரேலிய போலீஸார், இன்டர்போல் மூலம் சிபிஐயை தொடர்புகொண்டு ராஜ்வீந்தர் சிங்கை கைது செய்ய வலியுறுத்தினர். இந்த சூழலில், டெல்லியில் தலைமறைவாக இருந்த ராஜ்வீந்தர் சிங்கை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications