நியூயார்க் டூ சிட்னி.. இடைவிடாது 19 மணி நேர பயணம் செய்த உலகின் மிக நீண்ட இடைநில்லா விமானம்
Recommended Video
சிட்னி: நியூயார்க் நகரில் இருந்து குவென்டாஸ் நிறுவனத்தின் போயிங் 787-9 ரக பயணிகள் விமானம் தொடர்ந்து 19 மணி நேரம் 16 நிமிடம் பயணம் செய்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை அடைந்தது. அந்த விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த விமானம் தான் உலகின் மிக நீண்ட இடை நில்லா பயணிகள் விமானம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
தற்போது வரை சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் நோக்கி இயக்கப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமே மிக நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானமாக இருந்து வருகிறது. இந்த விமானம் இடை நில்லாமல் 18 மணி நேரம் 25 நிமிடங்களுக்கு பயணிக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக ஆக்லாந்து -தோஹா இடையேஇயக்கப்படும் கத்தார் ஏர்வேஸ் விமானம் 17 மணி நேரம் 40 நிமிடம் இடைநில்லாமல் பயணிக்கிறது. இதேபோல் பெர்த்- லண்டன் இடையே இயக்கப்படும் குவென்டாஸ் விமானம் 17 மணி நேரம் 20 நிமிடங்கள் பயணிக்கிறது.

அதிக தூரம் பயணம்
இந்நிலையில் சர்வதேச அளவில் மிக நீண்ட தூரம் இடை நில்லாமல் பயணிகள் சேவை வழங்க கடும் போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலியாவின் குவென்டாஸ் நிறுவனம், எங்குமே நிற்காமல் அதிக தூரம் பயணிக்கும் விமான சேவையை வழங்க விரும்பியது. இதன்படி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் இடையே சுமார் 16 ஆயிரத்து 200 கிலோமீட்டர் தூரத்தை இடைவிடாமல் பயணித்து வந்து சேரும் வகையில் பயணிகள் விமான சேவையை அளிக்க முடிவு செய்தது

16200 கிலோமீட்டர்
இந்த சோதனைக்கு போயிங் 787-9 ரக விமானம் பயன்படுத்தப்பட்டது. இதன்படி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட விமானம்,. 16 ஆயிரத்து 200 கிலோமீட்டர் தூரம் உள்ள சிட்னிக்கு 19 மணி நேரம் 16 நிமிடங்கள் பயணம் செய்து வந்தது. பத்திரமாக சிட்னி விமான நிலயத்திற்கு நேற்று காலை வந்தடைந்தது.

4 விமானிகள்
இந்த விமானத்தில் விமான ஊழியர்கள் உள்பட 49 பேர் பயணம் செய்தனர். 4 பைலட்கள் இந்த விமானத்தை இயக்கி வந்தனர். இதில் பயணம் செய்த அனைவரும் விமான நிறுவன அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் ஆவர்.

ஆய்வு செய்த குழு
பல்வேறு நேர மாற்றங்கள், வானியல் மாற்றங்களுடன் அதாவது இரவு பகல் என மாறி மாறி பயணிப்பதால், பயணிகளின் பயண களைப்பு எப்படி இருக்கும், விமானிகளின் மூளை நரம்பு செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக விமானம் 16 ஆயிரத்து 200 கிலோமீட்டர் தொடர்ச்சியாக பறக்கும் அளவுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது. விமானம் முதல் சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

லண்டன் -சிட்னி
இதுவே உலகின் மிக நீண்ட இடை நில்லா விமானம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது சோதனை லண்டன் மற்றும் சிட்னி இடையே மேற்கொள்ளப்பட உள்ளது. மொத்தம் மூன்று சோதனைகள் நடத்தப்பட உள்ளது. சோதனைகள் வெற்றி பெற்றால் 2022 அல்லது 2023ம் ஆண்டில் உலகின் மிக நீண்ட இடைநில்லா பயணிகள் விமான சேவை தொடங்கப்படும் என குவென்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications