தூத்துக்குடி அருகே வேகமாக சென்ற தண்ணீர் லாரி மோதி 10 பசுமாடுகள் பலி.... பொதுமக்கள் சாலை மறியல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வேகமாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் 10 பசுமாடுகள் பலியாகின.
தூத்துக்குடி: அதிவேகமாக சென்ற தண்ணீர் லாரி மோதியதால் 10 பசூமாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், தென் திருப்போரை அடுத்த கடம்பாகுளம், பூலுடையார் சாஸ்தா கோயில் அருகே திருச்செந்தூர்-நெல்லை சாலையோரத்தில் 20-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் மேய்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக படுவேகமாக வந்த தண்ணீர் லாரி அந்த பசுக்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 10 பசு மாடுகள் இறந்தன.
மேலும் சில மாடுகள் படுகாயம் அடைந்தன. இந்த மாடுகள் அனைத்தும் சிவகளை கருங்குளம் பகுதியைச் சேர்ந்த நல்லகண்ணு என்பவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுந்து நின்றன.
இதையடுத்து திருச்செந்தூர் ஆர்டிஓ கணேஷ்குமார், தாசில்தார் அழகர் உள்ளிட்டவர்கள் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சிலர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் நிலத்தடி நீரை எடுப்பவர்கள் மீது நடவடிக்கையும், பலியான பசுமாடுகளுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications